கொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி!
virus attack china, china virus, virus china, corona virus china, கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ், சீனா வைரஸ்
துபாய்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்போது மும்பை பங்கு சந்தை பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த 4 வருடத்தில் இந்திய பங்குசந்தையில் இதுதான் மோசமான வாரம் ஆகும்.
கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது. இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 78824 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இது உலகம் முழுக்க 22 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கிய மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
எப்படி சரிவு
கொரோனா காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1083 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 312 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்செக்ஸ் தற்போது 38,661.81 புள்ளிகளிலும் நிஃப்டி 11,321.30 புள்ளிகளிலும் உள்ளது.
மிக மோசம்
கடந்த 4 வருடத்தில் இந்திய பங்குசந்தையில் இதுதான் மோசமான வாரம் ஆகும். இந்த பங்குச்சந்தை சரிவு மேலும் தொடரும் என்கிறார்கள். உலகம் முழுக்க சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பங்கு சந்தை சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் பங்கு சந்தை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் சரிவு பல ஆயிரம் முதலீட்டாளர்களை பெருமளவு பங்குகளை இழக்க வைத்துள்ளது.
எவ்வளவு சரிவு
இதனால் மொத்தம் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் பணம் ஒரே நாளில் இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமான நிறுவனங்களான டாட்டா ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல் டெக், ரிலையன்ஸ் இண்ட்ரீஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் சிறிய சிறிய நிறுவனங்களும் இந்த சரிவால் தங்கள் முதலீட்டை 90% இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசியா பாதிப்பு
இந்த பங்கு சந்தை சரிவு ஆசியா முழுக்க எதிரொலித்துள்ளது. நன்றாக இருந்த ஜப்பான் பொருளாதாரம் சரிந்துள்ளது. பாகிஸ்தான் பங்கு சந்தை பெரிய அளவில் முடங்கி உள்ளது. அங்கு மூன்று பேருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் சரிவை சந்தித்துள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த வைரஸ் இப்போது நைஜீரியா போன்ற ஏழை நாடுகளுக்கும் பரவி உள்ளது.