கலக்கும் துபாய் பியூச்சர் ஆப் மியூசியம்.. மாணவர்களுடன் சுற்றி பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ்
துபாய்: கல்விச் சுற்றுலாவுக்குத் துபாய் சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று புதிய ப்யூச்சர் ஆப் மியூசியத்தை பார்வையிட்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தமிழ அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தான் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர்.

கல்விச் சுற்றுலா
மற்றொரு நடவடிக்கையாக மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. வினாடி வினா போட்டிகளில் வென்ற 68 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் அவர்கள் துபாய் சென்றடைந்தனர். அமைச்சர் அன்பில் மகேஷும் அவர்கள் உடன் அதே விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்.

துபாய்
துபாய், அபுதாபி நகரங்களில் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துபாயின் ஜெபல் அலி இந்து கோயில், லூவர் மியூசியம், கஸ்ர் அல் வதன் அரண்மனை ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அமீரக அரசுக்குச் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான அழைப்பிதழை அமைச்சர் வழங்கினார்.

ப்யூச்சர் ஆப் மியூசியம்
இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் துபாய் ப்யூச்சர் ஆப் மியூசியத்தை சுற்றிப் பார்க்க ஏற்படு செய்யப்பட்டு இருந்தது. அமைச்சர் அன்பில் மகேஷும் மாணவ மாணவிகளுடன் சென்றார். மியூசியத்தில் அமைச்சருக்குச் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சருக்குச் சிறப்பு வசதி ஏற்படுத்தித் தருவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதை மறுத்துவிட்டு அனைவரையும் போல வரிசையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மியூசியத்தை பார்வையிட்டார்.

வரிசையில் நின்ற அமைச்சர்
மாணவர்களுடன் வரிசையில் நின்று அமைச்சர் அன்பில் மகேஷ் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அமைச்சரும் தங்களுடன் வருகிறார் என்பதைப் பார்த்த உடன் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், இன்று மியூசியத்தை பார்வையிட்டனர். இன்று இரவு விமானம் மூலம் மாணவ மாணவிகள் சென்னை திரும்புகின்றனர்.

சிறப்புகள்
துபாயில் உள்ள மிக முக்கியமான அருங்கியாகங்களில் ஒன்று இந்த ப்யூச்சர் ஆப் மியூசியமும் ஒன்றாகும். இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்த மியூசியம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எப்படி இருக்கும் என்பதும் விளக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications