உலகமே பேசும் 'துபாய் அப்பா'.. ஒரு வயது மகளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு தந்த இந்திய தொழில் அதிபர்
துபாய்: துபாயில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சான்பால் தனது 1 வயது மகளுக்கு பிங்க் நிற Rolls-Royce காரை பரிசாக கொண்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை , தனது மகளுக்காக பிரத்யேமாக இங்கிலாந்தில் தயாரித்து இறக்குமதி செய்துள்ளார். இதில் அவரது மகளின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தையின் இந்த செயல் பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள்.
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...
தந்தை அன்பின் முன்னே...
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்...
தந்தை அன்பின் பின்னே..." என்ற பாடல் வரிகளை பலர் உலக தந்தையர் தினத்தன்று வைத்து ஸ்டேட்ஸ்ட் போட்டு பார்த்திருப்பீர்கள்.. ஆனால் உலக தந்தையர் தினத்தை கொண்டாடிய துபாயில் வாழும் இந்திய தொழில் அதிபர் எந்த தந்தையும் இப்படி செய்திருப்பாரா என்று கேட்கும் அளவிற்கு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார்.

துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சதீஷ் சன்பால் மிகவும் ஆடம்பரமான பரிசை தனது மகளுக்கு தந்திருக்கிறார். துபாயில் தந்தையர் தினத்தைக் கொண்டாடிய சதீஷ் சன்பால், தனது ஒரு வயது மகள் இசபெல்லாவுக்கு, தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ரோல்ஸ் ராய்ஸை பரிசாக வழங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து பிரத்யேமாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த காரில் "வாழ்த்துக்கள், இசபெல்லா" என்ற பெயர்ப்பலகையுடன் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ள வீடியோவின் படி, ANAX டெவலப்மென்ட்ஸ் நிறுவனரான துபாயைச் சேர்ந்த இந்திய தொழில் அதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தா மற்றும் குழந்தையுடன் சொகுசு கார் ஷோரூமுக்கு வருகிறார. தொடர்ந்து இளஞ்சிவப்பு நிற பலூன்கள் பறந்தபடி, மிகவும் ஆடம்பரான ரோல்ஸ் ராய்ஸ் கார் தெரிகிறது.
அப்போது இசை ஒலிக்கப்படுகிறது. பின்னாடியே ஷோரூமில் உள்ள பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அவர்களுடன் ஒரு வயது நிரம்பிய குழந்தை இசெபெல்லாவும் நடனமாடுகிறாள்.. இப்படியாக பரிசளிக்கப்பட்ட அந்த கார் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருக்கிறது. என்ன தான் தந்தை பரிசளித்தாலும், குழந்தை அடுத்த 17 ஆண்டுகளுக்கு அதை ஓட்டவே முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை. அதாவது 18வயது நிறைவடைந்த பின்னரே குழந்தை இசபெல்லாவால் காரை ஓட்ட முடியும்.

குழந்தை இசபெல்லாவிற்கு இதுதான் மிகப்பெரிய ஆடம்பர பரிசு என்று சொல்ல முடியாது. ஏனெனில் பிப்ரவரியில், அவளது முதல் பிறந்தநாள் விழா துபாயின் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான அட்லாண்டிஸ் தி ராயலில் நடைபெற்ற விதம் உலகின் பெரும் செல்வந்தர்களை வியக்க வைத்தது. செயற்கை பனி, பனிக்கட்டி சரவிளக்குகள் மற்றும் வெள்ளை மரங்களுடன் கூடிய குளிர்கால அதிசய பூமியாக இந்த இடம் மாற்றப்பட்டிருந்தது.

அந்த பளிங்கு மாளிகை ஓட்டல் குளிர்கால அதிசய அரண்மனையாக மட்டுமல்ல.. பாலிவுட் நட்சத்திரங்களான ரஹத் ஃபதே அலி கான், தமன்னா, அதிஃப் அஸ்லம் மற்றும் நோரா ஃபதேஹி போன்றவர்களின் தோற்றங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சிண்ட்ரெல்லாவை வெட்கப்பட வைக்கும் பால் கவுன் அணிந்த இளவரசி வண்டியில் குழந்தை இசபெல்லா அப்போது வண்டியில் வந்திறங்கினாள்.. இப்படியாக முதல் பிறந்த நாள் இருந்தது.

தொழில் அதிபர் சதீஷ் சான்பாலை இதற்காக சிறந்த தந்தை என்று சிலர் பாராட்டினாலும், 18 வயது வரை ஓட்ட முடியாத ரோல்ஸ் ராய்ஸ் காரை பல கோடி கொடுத்து இப்போது பரிசளிப்பது ஆடம்பரத்தின் உச்சம் என்றும், ஆடம்பரம் என்று சொல்வதை விட பைத்தியக்காரத்தனம் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். குழந்தை ஓட்டும் வரை அது வெறும் காட்சி பொருளாகவே இருக்கும் என்றும், இந்த நிகழ்வு தான் வறுமையில் வாடும் கோடிக்கணக்கான இந்தியர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications