எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.. ஈரோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு: அதிமுக-வுக்கு எதிராக சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருவதாகவும், அவர்களுக்கு இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவுக்கு சோதனைகள் புதிதல்ல என்றும், அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் அதிமுகவின் உட்கட்சி மோதல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் இரு தரப்பிலும் இதுவரை வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை
அம்மா மரணத்திற்காக போன ஊழியர்.. திரும்பி வந்தவருக்கு ஷாக் தந்த சுந்தர் பிச்சை.. சர்ச்சையில் கூகுள்!
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு, 106 பேர் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து தேர்தல் பணிக்குழுவில் கூடுதலாக முன்னாள் எம்பி கோபால், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பாஸ்கரன் மற்றும் கழக அமைப்பு செயலாளர்களான ரத்தினவேல், ஆசைமணி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர்.
எட்டப்பன் வேலை
இந்த நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருகிறார்கள். அதிமுகவுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியமானது. அதிமுகவுக்கு சோதனைகள் ஒன்றும் புதிதல்ல.
திமுக மீது குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்களுக்கு திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுகவால் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை வைத்து பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் யார்?
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு மற்றும் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.