வரிசையாக எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த அதிமுக நிர்வாகிகள்.. ‘திரும்பும் கலாச்சாரம்?’ - சலசலப்பு!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காலில், அதிமுக தொண்டர்கள் விழுந்து வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி காலில் அதிமுக நிர்வாகிகள் வரிசையாக விழுந்து வணங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடர்ந்து வருவதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனப் பேசினார்.

காலில் விழுந்த தொண்டர்கள்
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகள் பலர் மேடைக்குச் சென்று எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கிச் சென்றனர். இந்நிகழ்வு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

விமர்சனம்
அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடர்ந்து வருவதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் ஜெயலலிதா காலில் விழுந்து வணங்குவார்கள். அவர்கள் குனிந்து வணங்குவது கடுமையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி காலில் அதிமுக நிர்வாகிகள் வரிசையாக விழுந்து வணங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க ஆட்சியை பிடித்தது. ஆனால் தி.மு.க அரசு பதவி ஏற்ற 14 மாதங்கள் ஆகியும், தாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்றார்கள். அதை இன்றளவும் செயல்படுத்தவில்லை. கேஸ் சிலிண்டர் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை.

வேண்டுமென்றே முடக்கம்
அத்திக்கடவு -அவினாசி திட்டம் நியாயமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவேறி இருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே, அந்த திட்டத்தை இன்றளவும் நிறைவேற்றாமல் தி.மு.க அரசு காலம் கடத்தி வருகிறது. மேலும் பெருந்துறை தொகுதியின் தாகம் தீர்க்கும் திட்டமான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும், இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து சேரவில்லை. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அ.தி.மு.கவை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மக்கள் விரோத ஆட்சி
ஏழைகள் வசிக்கும் பகுதியிலே அம்மா கிளினிக் ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அரசு அதிமுக அரசு. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அம்மா கிளினிக் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருக்கும் நிலையிலும் கிளினிக்கை மூடி உள்ளார். இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications