மறைந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்!
ஈரோடு: சமீபத்தில் மறைந்த மதிமுக எம்பி கணேசமூர்த்தி இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கே கணேசமூர்த்தி குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதிமுகவில் இருந்த மூத்த தலைவர்களில் முக்கியமானவர் கணேசமூர்த்தி. தொடக்கம் முதலே இவர் வைகோவுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார். 1993இல் வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கணேசமூர்த்தி.

மதிமுக தொடங்கப்பட்டது முதலே மதிமுக ஈரோடு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார். வைகோவுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்த கணேசமூர்த்தி கடந்த 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
உடனடியாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் உடல்நிலை முன்னேறவில்லை. எக்மோ கருவி பொருத்தியும் அவருக்குச் சிகிச்சை தரப்பட்டது. இந்தச் சூழலில் தான் கணேசமூர்த்தி கடந்த வியாழக்கிழமை அதிகாலை காலமானார். சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணமாகும்.
கணேசமூர்த்தியின் திடீர் மறைவு மதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேசமூர்த்தி உடலுக்கு மதிமுக தலைவர் வைகோ, அவரது மகன் துரை வைகோ நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். கணேசமூர்த்தி குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வைகோ எமோஷ்னல் ஆனார்.
இதற்கிடையே ஈரோட்டில் கணேசமூர்த்தி இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இன்று காலை மறைந்த எம்பி கணேசமூர்த்தி பன்னை வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கே வைக்கப்பட்டு இருந்த கணேசமூர்த்தி படத்திற்கு மலை தூவி அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கிருந்த முதல்வர் ஸ்டாலின் கணேசமூர்த்தி குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு சென்றிருந்தார். இன்று காலை ஈரோட்டில் நடைப்பயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக உழவர் சந்தைக்குச் சென்ற அவர் அங்கே வாக்கு சேகரித்தார். உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
மதிமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்த கணேசமூர்த்தி 2016இல் மதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு பழனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்ற கணேசமூர்த்தி, 2006இல் வெள்ளகோவில் சட்டசபை தொகுதியில் தோல்வி அடைந்தார். 2009, 2019 என இரண்டு முறை அவர் ஈரோடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த முறை ஈரோட்டில் திமுக நேரடியாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications