சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்?
ஈரோடு: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்ய உத்தரவு கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில். அருணகிரிநாதரால் பாடப் பெற்ற ஸ்தலம் இதுவாகும். இந்த கோயிலில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

பக்தர்களின் கனவில் தோன்றும் முருகப்பெருமான் தனது சந்நிதியில் குறிப்பிட்ட பொருளை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்து விடுவது வழக்கம்.
கனவில் முருகன் கூறியதாக குறிப்பிட்டு கோயிலுக்கு வந்து அர்ச்சகர்களிடம் தகவல் தெரிவிப்பார்கள் பக்தர்கள். இதையடுத்து சுவாமி சந்நிதியில் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து அர்ச்சகர்கள் உத்தரவு கேட்பார்கள். வெள்ளைப்பூ வந்து உத்தரவு கிடைத்தால் மட்டுமே பக்தர்கள் கொண்டு வரும் பொருள் கண்ணாடிப் பேழையில் வைத்து பூஜை செய்யப்படும்.
ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, அரிசி, இளநீர், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பக்தர்கள் கனவில் தோன்றி இங்கு வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இங்கு பூஜைக்கு வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப சமூகத்தில் தாக்கம் ஏற்படும் என்பது ஐதீகம்.
இப்போது கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ராயனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கனவில் தீர்த்த கலசத்துடன் காவிரி ஆற்று நீரை வைத்து பூஜை செய்ய முருகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல் சிவன்மலை ஆண்டவர் கோயிலில் தீர்த்த கலசம் வைத்து பூஜை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வருடம் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். அல்லது கடுமையான மழைப் பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications