"கருணாநிதி".. வார்த்தையை விட்ட பாஜக சீனிவாசன்.. ஸ்பாட்டிலேயே மன்னிப்பு கேட்க வைத்த வே. மதிமாறன்.. ஏன்
கருணாநிதி குடும்பத்தை இழிவாக பேசினாராம் பாஜக சீனிவாசன்
ஈரோடு: டிவி நிகழ்ச்சி ஒன்றில், மறைந்த கருணாநிதி குடும்பத்தை பற்றியும், நீதிக்கட்சி தலைவர்களை பற்றியும், இழிவாக பேசியதற்காக பாஜக சீனிவாசன் வருத்தம் தெரிவித்து, தன் வார்த்தைகளை திரும்ப பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் திமுகவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
மக்கள் சபை என்று தனியார் டிவி சேனல் ஒன்று நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தற்கால சமூக சூழல்கள், அரசியல் நிலைப்பாடுகள் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, இதுபோன்ற விவாதங்களில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.. அதேசமயம், ஆரோக்கியமான அலசல்களும், சத்தான கருத்துக்களும் மேடைகளில் வைக்கப்படும்.
அர்ஜூன் சம்பத்
பொதுவாக, அரங்க நிகழ்ச்சி என்பதால், வெளிநபர்கள் இதில் அனுமதிக்கப்படுவதில்லை.. அதனால், வீடியோ, கேமராக்களும் பிரதானமாக இடம்பெற வாய்ப்பில்லை.. இப்படிப்பட்ட சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு சம்பவம் நடந்தது.. மொழி அரசியலை பேசுவது உரிமைக்காகவா? வாக்குக்காகவா? என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது.. இதில் "உரிமைக்காகவே" என்ற தலைப்பில், அமைச்சர் மனோ தங்கராஜ், நாஞ்சில் சம்பத் வே.மதிமாறன், ஆகியோரும், வாக்குக்காகவே என்ற தலைப்பில் அர்ஜுன் சம்பத், ராம சீனிவாசன், இயக்குனர் பேரரசு, ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்..
கசப்புகள்
விவாதம் காரசாரமாக நடந்த நிலையில், திமுக சார்பில் நாஞ்சில் சம்பத் பேசியபோது, பாஜகவை தரக்குறைவாக பேசிவிட்டதாக கூறி இந்து அமைப்பினர் கொந்தளித்தனர். அரங்கத்திலேயே நாஞ்சில் சம்பத்திடம் தகராறிலும் ஈடுபட்டு, அந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், பிறகு பத்திரமாக நாஞ்சில் சம்பத்தை காரில் பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் பல பத்திரிகைகளில் வெளியாகின. ஆனால், இதே மேடையில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. அதுகுறித்த வீடியோவும், அதுகுறித்த செய்திகளும் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அழைப்பாளர்
அதாவது, விவாத நிகழ்ச்சியில் ஒவ்வொரு சிறப்பு அழைப்பாளருக்கும், ஒவ்வொரு சுற்றிலும் பேச வாய்ப்பு தரப்படும்.. அப்போது, பாஜக சார்பில் பேசும்போது, மறைந்த கருணாநிதி குடும்பத்தை பற்றியும், பெரியார் குறித்தும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.. அத்துடன் நீதிக்கட்சி தலைவர்களை "நாய்" என்று பாஜக சீனிவாசன் இழிவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.. இதைக்கேட்டு, எதிர்தரப்பில் உட்கார்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அப்போது, திமுக ஆதரவாளரும், தீவிர பெரியாரிஸ்ட்டுமான வே.மதிமாறன் எழுந்து, பாஜக சீனிவாசன் பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்..
கேவலம் பொய்
"கேவலமா பொய்யா பேசுகிறீர்களே.. நீங்க ஒரு பேராசிரியரா? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? தலைவர்களை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று நேருக்கு நேராக கொந்தளித்து கூறினார். உடனே, அரங்கத்தில் இருந்த பாஜகவினரும், இந்து ஆதரவாளர்களும், மதிமாறன் தரப்புக்கு எதிராக கோஷம் போட்டனர்.. ஆனால், அதற்குள் அவர்களை பாஜக ஸ்ரீனிவாசன், அமைதியாக இருக்கும்படி சமாதானம் செய்தார்.. அரங்கத்தில் பெரும்பாலானோர் எதிர்ப்பு காட்டியதையடுத்து, தன் இழிந்த வார்த்தைகளை, திரும்ப பெறுவதாக மைக்கில் அறிவித்தார்.. அதற்கு பிறகுதான், அரங்கம் அமைதியானது.. இந்த வீடியோவை திமுக தரப்பினர் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரவுண்டு ரவுண்டாக
இந்நிலையில், அன்றைய தினம் ஈரோட்டில் என்னதான் நடந்தது? என்று நம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் எழுத்தாளர் வே.மதிமாறனை தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர் நம்மிடம் சொல்லும்போது, "அந்த அரங்கத்தில் திமுக தரப்பில் அவ்வளவாக யாரும் இல்லை.. இந்து மக்கள் கட்சியும், பாஜகவும், அவர்கள் ஆதரவாளர்களை கையோடு அழைத்து வந்திருந்தனர்.. விவாத நிகழ்ச்சியில், முதல் ரவுண்டிலேயே பாஜக தரப்பில் என்னை பேசவிடவில்லை.. தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டு இருந்தார்கள். 2 வது ரவுண்டில் நான் பேசும்போதுதான், கலைஞர் குடும்பம், பெரியார் குறித்தும் நீதிக்கட்சி தலைவர்களை நாய் எனவும் கேவலமா, அதுவும் பொய்யா பேசறீங்களே, மன்னிப்பு கேளுங்க என்று சீனிவாசனிடம் சொன்னேன்..
இழிந்த வார்த்தை
உடனே இதை பார்த்ததும், அரங்கத்தில் எனக்கு எதிராக பாஜகவினர் கத்தி கூச்சல் போட்டார்கள்... இதுகெல்லாம் பயந்தவன் நானல்ல... ஸ்ரீனிவாசன் மன்னிப்பு கேட்டாகனும் என்று மறுபடியும் மேடையிலேயே கறாராக சொன்னேன்.. அதற்கு பிறகுதான், தன் வார்த்தையை சீனிவாசன் திரும்ப பெற்றார்.. அந்த வீடியோவை பார்த்தாலே தெரியும், கூட்டத்தை ஸ்ரீனிவாசன் அமைதிப்படுத்துவதும், பிறகு இழிந்த வார்த்தையை வாபஸ் பெறுவதும் குறைந்த ஒலியில் இருக்கிறது.. இந்த விவகாரம் நடந்தபிறகுதான் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதே தவிர, நாஞ்சில் சம்பத் பேசும்போது நிகழ்ச்சி நிறுத்தப்படவில்லை" என்று நம்மிடம் தெளிவுப்படுத்தினார் வே. மதிமாறன்.