விடா மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் ஈரோடு! 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
ஈரோடு: கர்நாடாக மாநிலத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து நீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 வீடுகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் மழை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழக பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த அளவு இன்று 2 லட்சம் கனஅடியை தாண்டியது. இதனிடையே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு, அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன்படி அணையை ஒட்டிய மின் நிலையம் மற்றும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோல மீட்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
இந்த வெள்ளம் காரணமாக ஆற்று நீருடன் கழிவு நீரும் சூழ்ந்துள்ளதால் மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது மற்றும் செல்ஃபி எடுப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்களை தடுக்க ஆற்று கரையோரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் இதர பகுதிகளாக அம்மாபேட்டை, கொடுமுடி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனனர். தற்போது மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்டசம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கையில், இந்த அளவு சுமார் 2.4 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையையொட்டி உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.