ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 2 வெளிமாநில அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம்.. யார் இவர்கள்?பின்னணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களாக சிக்கிமின் ஒரு ஐஏஎஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லுக்கான பார்வையாளர்கைள தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யார்? நியமனத்தின் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. 8-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட்?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கி உள்ளது. வேட்பாளராக மறைந்த எம்எல்ஏவான திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதுதவிர சுயேச்சைகளும் களமிறங்க உள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் தேர்தல் பணிகளை துவங்கி வீடு வீடாக பிரசாரம் செய்ய துவங்கி விட்டனர்.

அதிமுகவில் குழப்பம்
அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக சார்பில்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இருதரப்பின் வேட்பாளர் அறிவிப்பும் தாமதாமாகி வருகிறது.

2 அதிகாரிகள் நியமனம்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. அதன்படி பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிப்ரவரி 7 ம் தேதி முதல் பார்வையாளர்களாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனத்துக்கான காரணம் என்ன?
பொதுவாக ஏதேனும் ஒரு மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அங்கு பணம்பட்டுவாடா உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் என்ற குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. மேலும் ஆளும் கட்சியின் தலையீட்டால் அதிகாரிகள் சரியாக செயல்பட முடியாத நிலை இருக்கும் என எதிர்க்கட்சிகள் பொதுவாக குற்றம்சாட்டுவார்கள். இதற்காகவே வெளிமாநில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடைத்தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். அந்த வகையில் தான் தற்போதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications