ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. ஜன.13, 17 முக்கியமான நாள்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்தில், வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.
2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி காலமானார். அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் அப்பா ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெற உள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.
நேற்று விண்ணப்ப விநியோகம் தொடங்கியதுமே சுமார் 10 பேர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். அதிக தேர்தல்களில் போட்டியிட்டு சாதனை படைத்த மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட நேற்று விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளார்
இன்று வேட்புமனுக்கள் வாங்கப்படுவதால், ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் எல்லை கோடு போடப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் அதற்கு மேல் காரில் வர முடியாது. மேலும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் வழங்கும் முன்பு அதை சரிபார்க்க தனியாக ஒரு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை அங்கு வழங்கி சரிபார்த்து பெற்றுக்கொண்டு, மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கலாம். வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி வளாகம், அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்று பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது. தொடர்ந்து வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.












Click it and Unblock the Notifications