களை கட்டும் உள்ளாட்சித் தேர்தல்.. ஈரோட்டில் அதிமுக தடபுடல் !
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. பிற மாவட்டங்களில் ஊரக பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் ஈரோடு அருகே முத்தம்பாளையம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்காவினை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்காக வருகை தந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பெரும் திரளான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பொதுவெளியில் வைத்தே ஆரத்தி தட்டில் 100 ரூபாயும் விழுந்தது. அதை ஆரத்தி தட்டுடன் வந்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் தற்போது ஊராட்சித் தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது. ஒரு பக்கம் பதவிகளை சிலர் ஏலம் விடும் சர்ச்சையும் வெடித்து வெளி வந்து கொண்டுள்ளது. மறுபக்கம் கட்சிகள், உள்ளூர் பிரமுகர்கள் தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரமாகி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications