ஈரோட்டில் பண்ணாரி அம்மன் கோயில் கிட்ட யார்னு பாருங்க.. சத்தி - மைசூர் ஹைவேஸில் அது பாட்டுக்கு போகுது
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில்,. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. இந்த பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. இந்த பகுதியில்தான் அடிக்கடி சிறுத்தைகள் நடமாடுவதாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் அந்த சிறுத்தைகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்து வருகின்றனர்... இப்போதும் அப்படியொரு கோரிக்கை கிளம்பியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன...

எனவே, வனவிலங்குகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை போன்றவை அடிக்கடி தென்பட்டு கொண்டிருக்கிறது.. சிலசமயம், இரவு நேரத்தில் சாலையை கடக்கும்போது, சிறுத்தைகள் அவ்வப்போது வாகனங்களில் சிக்கி, மோசமாக அடிபட்டு, பரிதாபமாக இறந்தும் விடுகின்றன.
சிறுத்தைகள், புலி நடமாட்டம்
இதையடுத்து, அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், வனவிலங்குகள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காக சாலையின் இருபுறமும் 12 மீட்டர் தூரம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு பலியாவதும் இறப்பதும் கணிசமாக குறைந்து வருகிறது.
அதேபோல, சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியிலும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.. பொதுவாக, எப்போதுமே இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்படும்.. அதிலும், வெள்ளிக்கிழமை, அமாவாசை, விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வார்கள்..
இந்நிலையில், சமீபத்தில் இந்த கோவில் அருகே உள்ள பாலத்தின் அருகில், சாலையோரம் ஒரு சிறுத்தை நடமாடியது. அப்போது வாகனத்தில் சென்ற சிலர் பீதியடைந்து வேகமாக சென்று விட்டனர்.

தொலைவில் போட்டோ
ஒரு சிலர் தொலைவிலேயே வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுத்தனர்.. அந்த பகுதியிலேயே திரிந்து வந்த சிறுத்தை, சிறிது நேரத்தில் காட்டுக்குள் சென்று விட்டது. எனினும் கோவில் அருகே சிறுத்தை நடமாடியதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் இதே கோயிலின் அருகே ஏற்பட்டுள்ளது.. பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிதிரிந்து, பிறகு மெல்ல சாலையை கடந்து சென்றுள்ளது.. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்..
பண்ணாரி அம்மன் கோவில்
சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை, பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பீதியில் உள்ளார்களாம்.
இதுகுறித்து வனத்துறையினர் சொல்லும்போது, "பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications