புத்தகம் வாசிப்பை நேசித்த திருமகன் ஈவெரா! வாழ வேண்டிய வயதில் மரணத்தை தழுவிய இளங்கோவன் மகன்
ஈரோடு: வாழ வேண்டிய வயதில் மரணத்தை தழுவி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திற்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் திருமகன் ஈவெரா.
பெரியாரின் கொள்ளுப் பேரன், ஈவிகே சம்பத்தின் பேரன், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என பல பெருமைகளுக்கும் பாரம்பரிய பின்னணிக்கும் சொந்தக்காரர் திருமகன் ஈவெரா.
புத்தகம் வாசிப்பை நேசிக்கும் பழக்கம் கொண்ட திருமகன் ஈவெரா, தனது அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் அவ்வப்போது நல்ல தலைப்புகளில் தனது கண்களில் படும் புத்தகங்களை பரிசாக அனுப்பி வைக்கும் வழக்கம் கொண்டவர்.

பெரியாரின் கொள்ளுப்பேரன்
பெரியாரின் உடன்பிறந்த அண்ணனான ஈ.வே.கிருஷ்ணசாமியின் மகன் வழி கொள்ளுப் பேரனான திருமகன் ஈவெரா, தாம் ஒரு பெரிய அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பொழுக பழகக் கூடியவர். இவரது தாத்தா ஈவிகே சம்பத்தும், இவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனும் தமிழக அரசியலில் தங்களுக்கென தனித் தடத்தை பதித்துள்ளனர். அவர்கள் வழியில் தடம் பதிக்க விரும்பிய திருமகன் ஈவெரா கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனார்.

தேர்தல் அரசியல்
தேர்தலில் முதல்முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போடியிட்டாலும் கூட அதற்கு முன்பு பல தேர்தல்களில் தனது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக தேர்தல் பணியாற்றியிருக்கிறார் திருமகன் ஈவெரா. ஈவிகேஎஸ் இளங்கோவன் சற்று முன் கோபப்படக் கூடியவராக இருப்பினும் திருமகன் ஈவெரா அதற்கு நேர்மாறானவர். பொதுவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பிறகு எல்லா நிலைகளிலும் பொறுமையை கடைபிடித்து வந்தவர். குறிப்பாக ஈகோ பார்க்காமல் கட்சியின் சீனியர்கள், மற்றும் ஈரோட்டில் அமைச்சர் முத்துச்சாமியுடன் இணைந்து செயலாற்றியவர்.

கட்சிப் பதவி
சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துள்ள இவர் 2015 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகபிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரானார். அந்தப் பதவியை தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட திருமகன் ஈவெரா, தனது கண்களில் நல்ல தலைப்புகளில் புத்தகங்கள் தென்பட்டுவிட்டால் போது அதை வாங்கி தாம் படிக்கிறாரோ இல்லையோ தனது நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் இந்த புத்தகத்தை படித்து பாருங்க எனக் கூறி பார்சல் அனுப்பி வைக்கும் வழக்கம் கொண்டவர்.

செல்லமாக ராம்
திருமகன் ஈவெராவை அவரது வீட்டிலும் நெருங்கிய நண்பர்களும் ராம் என்று செல்லமாக அழைப்பார்கள். மாரடைப்பு மூலம் தன்னை இப்படியொரு மரணம் தழுவும் என்பதை கனவிலும் நினைத்து பார்க்காத இவர், 2 நாட்களுக்கு முன்னர் தான் 2023ஆம் ஆண்டு சிறப்புடன் அமைய வேண்டும் என புத்தாண்டு வாழ்த்துப் பதிவு வெளியிட்டிருந்தார். மேலும், தன்னை சந்தித்து வாழ்த்து பெற வந்தவர்களுக்கும் வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.

ஒரே மகள்
திருமகன் ஈவெராவுக்கு பூர்னிமா என்ற மனைவியும் சமணா என்ற மகளும் உள்ளனர். பெங்களூவில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் அகில இந்திய அளவில் ஜூனியர் சாம்பியன் கோப்பை பெற்றதற்காக 2 மாதங்களுக்கு முன்பு தான் மகளை முதல்வரிடம் அழைத்துச் சென்று வாழ்த்துப் பெற்றார் திருமகன் ஈவெரா. இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் திருமகன் ஈவெராவை பண்பாளர் என புகழாரம் சூட்டியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications