பண்ணாரியில் 200 ரூபாய் பழக்கூடை 850 ரூபாய்க்கு விற்பனை.. பக்தர் வைத்த வேண்டுகோள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அதிக விலைக்கு பூக்கள் மற்றும் பழங்கள் விற்பதாக குற்றச்சாட்டினை பக்தர்கள் சிலர் முன்வைத்துள்ளனர். சாதாரணமாக 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்படும் பூக்கள் பழங்கள் கொண்ட தாம்பூலம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சக்திவாய்ந்த அம்மன் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் குலதெய்வங்களில் ஒன்றாக பண்ணாரி அம்மன்கோவில் இருக்கிறது. இது முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அமைந்துள்ளது.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் பண்ணாரி உள்ளது. இது திம்பம் மலைப்பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஆன்மீகத் தலமாக இருக்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தானாகவே பால் சொரிவதைக் கண்ட மக்கள், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு சுயம்புவாக அம்மன் சிலை இருந்ததைக் கண்டார்கள். பண்ணாரி என்றால் "பண்ணை + அரி" (காட்டுப்பகுதி) என்று பொருள். காட்டில் தோன்றிய அம்மன் என்பதால் "பண்ணாரி மாரியம்மன்" என்று அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோவிலின் மிக முக்கியமான நிகழ்வு பங்குனி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா ஆகும். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து அக்னி குண்டத்தில் (நெருப்பில்) இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதற்காகக் காட்டில் இருந்து கொண்டு வரப்படும் மரத்துண்டுகளைக் கொண்டு பிரம்மாண்டமான குண்டம் வளர்க்கப்படும். இங்கு வழங்கப்படும் திருநீறு மற்றும் தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆண்டு தோறும் இக்கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இறங்குவார்கள். அப்போது வந்த பக்தர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கோவில் அருகாமையில் இருக்கும் கடைகளில் விற்கப்படும் பூக்கள் மற்றும் பழங்கள் கொண்ட தாம்பூலம் தட்டு என கூறப்படும் ஒரு செட்டு 850 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டியிருந்தார்.
சாதாரணமாக 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்படும் பூக்கள் பழங்கள் கொண்ட தாம்பூலம் எனப்படும் செட்டு ஒன்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோவிலில் 850 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகநலங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications