அருந்ததியினர் சமூகத்தை அவதூறாக பேசவில்லை.. வரலாற்றை தான் சீமான் பேசினார்.. நாதக மேனகா சொன்ன விளக்கம்
அருந்ததியினர் சமூகத்தை சீமான் அவதூறாக பேசவில்லை என்று மேனகா விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: அருந்ததியினர் சமூகத்தை பற்றி சீமான் அவதூறாக பேசவில்லை என்று அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கமளித்துள்ள மேனகா, சீமான் பேசிய கருத்துக்கு வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் அருந்ததியர் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருந்ததியினர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் அலுவலர் நோட்டீஸ்
இதனைத் தொடர்ந்து அருந்ததியினர் சமுதாயத்தைச் மக்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் நோட்டீஸ் அனுப்பினார்.

சீமான் பேசியது என்ன?
சீமான் பிரச்சாரத்தில் பேசுகையில், விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான்.

சீமானின் சர்ச்சை
அதே போல், கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள் என்று தெரிவித்தார்.

வரலாற்று ஆதாரங்கள்
இந்த நிலையில் தேர்தல் அலுவலர் நடத்தும் அலுவலர் அனுப்பிய நோட்டீஸிற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசவில்லை. வரலாற்று தொடர்பான கருத்துகளையே சீமான் பிரச்சாரத்தின் போது பேசினார். சீமான் பேசிய கருத்துக்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications