எடப்பாடி பிரசார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கோபிசெட்டிபாளையத்தில் துயரம்
ஈரோடு: இன்று கோபிசெட்டிபாளையம் வந்த எடப்பாடியை வரவேற்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்த நிலையில், பிரசார கூட்டத்திற்கு வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். எடப்பாடி பிரசார கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது அர்ஜுனன் என்பவர் மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அர்ஜுனனை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே விஜய்யின் கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் எடப்பாடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு
செங்கோட்டையன் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனுக்கு தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் செங்கோட்டையனின் கோட்டையாக அறியப்படும் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கும் வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எடப்பாடியை வரவேற்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்த நிலையில், பிரசார கூட்டத்திற்கு வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மயங்கி விழுந்து உயிரிழப்பு
எடப்பாடி பிரசார கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது அர்ஜுனன் என்பவர் மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அர்ஜுனனை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
ஏற்கனவே விஜய்யின் கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்ற பரிசீலனையில் உள்ளன. அதுவரை அரசியல் கட்சிகள் ரோடுஷோவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இந்த நிலையில் பிரசாரத்திற்கு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த அர்ஜுனன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-இன்று, கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்திற்கு வந்த கொண்டையமபாளையம் பகுதியைச் சேர்ந்த திரு. அர்ஜுனன் அவர்கள், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வரும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
திரு. அர்ஜுனன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications