இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் கோகுலாஷ்டமி! பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: இன்று நாடு முழுவதும் கோகுலாஷ்டமி கொண்டாடப்படும் நிலையில், அதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இந்த உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போது இறைவன் மனித ரூபத்தில் அவதரிப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படி அதர்மத்தை அழிக்கப் பூமியில் கிருஷ்ணன் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் சிறப்பு வாய்ந்தது. கிருஷ்ணர் பிறக்கும் முன்பே அவரை அழிக்க அவரது தாய்மாமன் கம்சன் காத்திருந்ததாகப் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கும்.
அதையெல்லாம் தாண்டித்தான் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் தான் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதன்படி மதுராவில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் பக்தர்கள் விடிய விடிய வழிபட்டனர். ஆடல், பாடலுடன் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.
கோகுலாஷ்டமி : கோகுலத்தில் கண்ணா கண்ணா... கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய நல்ல நேரம்
இந்நிலையில், பிரமர் நரேந்திர மோடி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பக்தி மற்றும் மகிழ்ச்சியின் இந்த திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.