சேலம் ரவுடி வெட்டி கொலை.. சுதாரித்த போலீஸ்.. ஈரோடு அருகே வைத்து.. ஹைவேயில் 3 பேர் சுட்டுப்பிடிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சுப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர் சாணக்யா என்றும் அழைக்கப்படுவார். ஜான் (எ) சாணக்கியன் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது இவர் குடும்பத்தினருடன் சேலம் மாவட்டத்தில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இன்று நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டிக்கு தன் மனைவியுடன் சேலம் சென்று விட்டு திருப்பூர் நோக்கி தனக்கு சொந்தமான காரில் பயணித்துள்ளார். அப்போது கார் சித்தோடு அருகே வந்தபோது, சுற்றி வளைத்த மர்மகும்பல் காரில் பயணித்த ஜானை சரமாரியாக வெட்டியுள்ளது.
இதை தடுக்கச் சென்ற மனைவி ஆதிரா என்பவருக்கும் கை கால்களில் வெட்டு விழுந்துள்ளது. இந்த தகவலறிந்து சித்தோடு போலீசார் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த ஜான் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அவரது மனைவி ஆதிராவுக்கு தொடர்ந்து நசியனூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மக் கும்பல் குறித்து சித்தோடு போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது பவானி அருகே மர்மக் கும்பல் தப்பி சென்றதாகவும் அங்கு டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மர்மக் கும்பலை கால்களில் சுட்டு பிடித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகிய மூவரையும் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications