''கலைஞர் மீது மதிப்பும் மரியாதையும் மிக்கவன் நான்! பெரிய மனுஷன் அவர்''! பொன்.ராதாகிருஷ்ணன் 'பளிச்'!
ஈரோடு: கருணாநிதி மீது மதிப்பும், மரியாதையும் மிக்கவன் நான் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

கருணாநிதி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் அவரது அரசியல் வாழ்வை பற்றி யாரும் தவறாக பேச முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கருணாநிதி பெரிய மனுஷன் என்றும் அவரைப் போய் ஒரு பேனாவுக்குள் அடைக்க வேண்டாம் எனவும் பொன்.ராதா கேட்டுக்கொண்டார். இதை தவறாக கூறுகிறேன் என யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கருணாநிதியின் புகழை வெறும் பேனாவோடு சுருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
திமுக பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் , நீதிமன்றத்திற்கு வேலை வந்துவிட்டதாக கருதுவதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அதனால் ராகுல்காந்தியின் பேச்சுக்களை பொருட்படுத்த தேவையில்லை எனவும் விமர்சித்தார்.
தமிழ் மொழியானது உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாக திகழ்வதாக குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை போல் வேறு எந்த பிரதமரும் தமிழ் மொழியை கொண்டாடியதில்லை எனக் கூறினார்.
தமிழ் மொழி மீது பிரதமர் மோடிக்கு அப்படியொரு பக்தி இருப்பதாக தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றியும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
மனதில் குரல் நிகழ்ச்சியில் பலமுறை தமிழகத்தை பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாகவும் அரசியல் கலக்காத பேச்சாக மனதின் குரல் அமைந்திருக்கிறது எனவும் புகழ்ந்தார்.












Click it and Unblock the Notifications