பெரியார் படத்தில் “காவி” சாயம்.. அதுவும் அவர் ஊரில்! “ஆக்ஷன்” எடுங்க - திமுக புகார்
ஈரோடு: சத்தியமங்கலத்தில் தந்தை பெரியார் புகைப்படம் கொண்ட சுவரொட்டியின் மீது காவிச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
ஆ.ராசா பேச்சு திரிக்கப்படுகிறது.. பாஜக வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.. கி.வீரமணி தடாலடி!
சத்தியமங்கலம்
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் பெரியார் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் சுவரொட்டியில் உள்ள பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் காவி சாயம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து நிலையம்
சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் பால் நிலையத்தின் பக்கவாட்டு சுவற்றில் "சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டு இருந்த 3 சுவரொட்டிகளில் இருந்த பெரியார் படத்தின் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதனை கண்டு திராவிட இயக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக புகார்
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான ஆர். ஜானகிராமசாமி தலைமையில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை
சுவரொட்டியில் உள்ள பெரியாரின் புகைப்படத்தின் மீது காவி சாயத்தை ஊற்றி மத மோதலை தூண்டும் வகையில் இச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதன் பேரில் போலீசார் காவிச் சாயம் ஊற்றியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.