"சென்னைக்கு சொந்த வேலையாக போனேன்.. டிடிவி தினகரனை சந்திக்கவில்லை!" - செங்கோட்டையன்
ஈரோடு: நேற்று சென்னை சென்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரனை சந்தித்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதனை செங்கோட்டையன் தற்போது மறுத்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "சென்னையில் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்கவே சென்றேன். யாரையும் சந்திக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அது சம்பந்தமாகத்தான் நேற்றைய தினம் சென்னைக்கு சென்றேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு, இன்று வீடு திரும்பி இருக்கிறேன். யாரையும் அரசியல் ரீதியாகவோ மற்ற ரீதியாகவோ நான் சந்திக்கவில்லை. அதுபோன்ற ஒரு தவறான செய்திகள் வந்தவுடன், பல்வேறு தொலைக்காட்சி நண்பர்களுக்கு நான் சொந்த வேலையாக சென்றிருக்கிறேன், என் மனைவியை பார்த்துவிட்டு நான் திரும்புகிறேன் என்று, தெளிவாக கூறியிருந்தேன்.
என்னை பொறுத்தவரை இந்த இயக்கம் வலுவை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. புரட்சித்தலைவர் கண்ட கனவு, புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் உரையாற்றிய போது, நூறாண்டு காலம் இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த கனவை நிறைவேற்றுவதற்கு, பல்வேறு தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக இருந்து கொண்டிருக்கிற தொண்டர்கள், என இந்த இயக்கத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான், அன்றைய தினம் இந்த செய்திகளை நான் வெளியிட்டேன். ஆகவே எங்களைப் பொறுத்த வரையில் குறிக்கோள் ஒன்றுதான். நேற்றைய தினம் நான் யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை. இதை தெளிவு படுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஒருமித்த கருத்துக்கள் உள்ள நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஷன். எல்லோருடைய மனதிலும் ஒன்று இணைந்து வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலை இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். முன்னதாக நேற்று சென்னை சென்றிருந்த செங்கோட்டையன், அடையாறில் டிடிவி தினகரனை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று டிடிவி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இந்த கருத்தை செங்கோட்டையன் ஆழமாக வலியுறுத்தியிருந்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதற்காக வெளியேற்றப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதனை கொஞ்சமும் ரசிக்காத எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த சூழலில் செங்கோட்டையன், டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆனால் இதனை செங்கோட்டையன் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications