முதல் குறி.. சொந்த ஊரில் இருந்தே தொடங்கிய செங்கோட்டையன்.. தவெகவில் ஐக்கியமாகும் அதிமுக நிர்வாகிகள்!
ஈரோடு: தவெகவில் இணைந்த பின் சொந்த ஊரில் முகாமிட்டுள்ள செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான ஒன்றிய, நகர், பேரூராட்சி நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்து வருகின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் சென்னைக்கு வர முடியாத ஆதரவாளர்களும் தவெகவில் இணைத்து கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் கொடுத்த செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இதன்பின் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்ட செங்கோட்டையன், ஒரே மாதத்தில் தவெகவில் விஜய்யை சந்தித்து இணைந்துள்ளார். விஜய்யின் வயதும், செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஆனால் விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டு செங்கோட்டையன் இணைந்துள்ளார். அதேபோல் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை தவெகவுக்கு வரவேற்று, அவருக்கு நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியையும் விஜய் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று சென்னையில் இருந்து செங்கோட்டையன் சொந்த ஊர் புறப்பட்டார்.
கோவை விமான நிலையத்திலேயே தவெகவினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதையடுத்து கோபிச்செட்டிபாளையத்திற்கு வந்த போது, மிகப்பெரிய அளவில் தவெக தொண்டர்களும், நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த செங்கோட்டையன், தவெகவினர் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது செங்கோட்டையன் பேசுகையில், தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய் தான். விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா? புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா? காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் நம் கூட்டணி வலிமையாக மாறும். நம்முடன் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இப்படி பேசியதற்கேற்ப செங்கோட்டையன் சொந்த ஊரில் இருந்தே பணிகளை தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக தன்னுடைய ஆதரவாளர்களை தவெகவில் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய, நகர், பேரூராட்சி நிர்வாகிகள் செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்து வருகின்றனர்.
இதனிடையே தவெக தலைமை தரப்பில் செங்கோட்டையனுக்கு 3 பவுன்சர்களுடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டையன் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய் விரைவில் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications