எடப்பாடி பதவிக்கு வந்த 4 ஆண்டுகள்.. அதிமுக ஒரு தேர்தலில் கூட வெல்லவில்லை.. செங்கோட்டையன் ஓபன் டாக்!
ஈரோடு: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்று 4 ஆண்டுகளாகிய போதும், எடப்பாடி பழனிசாமியால் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளதாக கூறிய செங்கோட்டையன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் வெளியேறியவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென 6 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தி விழாவில் முன்னால் முதல்வர் ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்திப்பதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை செங்கோட்டையன் அவரது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், 1975ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன். கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், எனக்கு 2 முறை வந்த வாய்ப்புகளைக் கூட விட்டுக் கொடுத்தேன். இதனை இந்த நாடு அறியும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் தான் பேசினார். சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவியை பெற்றார் என்பதை நாடறியும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். அதிமுகவ்ல் 53 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற போக்கில் எடப்பாடி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 2019, 2021, உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளதாக கூறிய செங்கோட்டையன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் வெளியேறியவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென 6 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications