வேலூர் லோக்சபா தேர்தலில் அமமுக ஏன் போட்டியிடவில்லையாம் தெரியுமா?
ஈரோடு: வேலூர் லோக்சபா தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஓடாநிலை பகுதியிலுள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அவரது நினைவு நாளையொட்டி, தீரன் சின்னமலை சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது: எங்கள் கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில், அமமுக போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததாலேயே அதை பின்னடைவு என்று சொல்ல முடியாது.
முத்தலாக் உட்பட எந்த ஒரு சட்டமும் சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, விருப்பு வெறுப்பு அடிப்படையிலான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
முத்தலாக் விவகாரத்தில் லோக்சபாவில், ஒரு நிலைப்பாடும், ராஜ்யசபாவில் ஒரு நிலைப்பாட்டையும், அதிமுக எடுத்துள்ளது. உலகிலேயே இது போன்ற நிலைப்பாடு எடுக்கும் கட்சி குறித்து நான் கேள்விப்பட்டதில்லை.
இரட்டைத்தலைமை என்ற பெயரில் மக்கள் விரும்பாத ஆட்சி நடத்துகிறார்கள். ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
உள்ளாட்சித்தேர்தல் வருமா என்று தெரியவில்லை. வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications