கேரளாவில் கொட்டும் கனமழை... நிரம்பிய அணைகள் : இடுக்கி அணை திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அணைகள் நிரம்பியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி: கேரளா மாநிலத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இடுக்கி அணை நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருவதால் அணைக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வரை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மேற்குப் பருவமழை முடியப்போகும் நேரத்தில் கேரளாவில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
கோட்டயம் மாவட்டம் முண்டகயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில், பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்து சென்றது. துலாம் மாத பூஜைக்காக ஆன்லைனில் ஐயப்பனை தரிசனம் செய்ய முன்பு பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நிரம்பிய அணை
கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் இடுக்கி அணை நீர்மட்டம் 2,391.36 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ப்ளூ அலர்ட் விடுக்கப்பட்டது. தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,450 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 2,397 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணைக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ஆரஞ்ச் அலர்ட் நேற்று விடுக்கப்பட்டது.
Recommended Video
அணை திறப்பு
நீர்மட்டம் 2,397.85 கன அடியாக உயரும் பட்சத்தில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்படும் எனவும் நீர்மட்டம் 2,398.85 கன அடியாகும்போது அணை திறக்கப்படும் எனவும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலெர்ட் தற்போது விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் முதல் 1 லட்சம் கன அடிவரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறுகளில் வெள்ளம்
கேரளாவின் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அணைகளின் உபரி நீரும் திறந்து விடப்பட்டால் ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அணைகள் மற்றும் காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரைகளை உடைத்து ஊருக்குள்ளும் பாய்கிறது.
தத்தளிக்கும் கேரளா
விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கோட்டயம், குற்றிக்கல், இடுக்கி, பத்தினம்திட்டா பகுதிகளில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. கேரளாவில் பெரு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையின் கூடுதல் குழுக்கள் கேரளா சென்றுள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல கடற்படை, விமான படை மற்றும் ராணுவ வீரர்கள் என முப்படையினரும் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
நிவாரண உதவி
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய அரசு உதவி
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தரப்பில் இருந்து உடனடியாக செய்து தரப்படும் எனவும் கூறினார்.