கனமழையால் கடும் பாதிப்பு.. சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
எனவே, மாணவர்களின் நலன் கருதி சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஷாக்.. டெல்லி சைக்கோ கொலைக்காரன் ஒரு
கொட்டும் கனமழை
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பயிர்கள் மூழ்கியுள்ளன.
கடுமையான பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பார்வையிட்ட தலைவர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அப்பகுதிகளில் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள உத்தரவில், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், பள்ளிகள் நிவாரண முகாம்களாகச் செயல்படுவதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.