பச்சிளம் குழந்தையின் உயிரோடு விளையாடிய நர்ஸ்கள்..மூன்றாக உடைந்த கை..ஓசூரில் பரபரப்பு
ஓசூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததே குழந்தையின் கை முறிவுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுராந்தகம் அருகே வீடியோ கால் மூலம் நர்ஸ்கள் பிரசவம் பார்த்தததில் குழந்தை இறந்து போன நிலையில் தற்போது நர்ஸ்களின் அலட்சியத்தினால் பிஞ்சு குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இதே போல சம்பவம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி,36 இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா,33 இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்தார்.
இதையடுத்து மருத்துவர் பிரசவ தேதி கொடுத்திருந்த நிலையில், வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் பிற்பகலில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்துள்ளனர்.
நர்ஸ்கள் பார்த்த பிரசவம்
புஷ்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சனை இருக்கிறது என குறிப்பிட்டிருந்துள்ளது. ஆனால் இதனை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கேயே சுகப்பிரசவம் பார்த்துவிடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததன்படி மாலை 6 மணிக்கு தலைகீழாக குழந்தையின் கால்கள் மட்டுமே வந்துள்ளது. தலை வெளியே வரவில்லை.
வீடியோ கால் பிரசவம்
இதனால் செய்வதறியாது தவித்த செவிலியர்கள் மற்றொரு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். விஜய் நடித்த 'நண்பன்' திரைப்பட பாணியில் வீடியோகால் வாயிலாக பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி செவிலியர்கள் முயற்சி செய்துள்ளனர். எனினும் குழந்தையின் தலைவெளியே வரவில்லை.
உயிரிழந்த குழந்தை
புஷ்பாவின் உடல் நிலையும் மேலும் மோசமாகவே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக புஷ்பாவை மேல்சிகிச்சைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து பிறந்தது. இதனையடுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தவே அந்த நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல சம்பவம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது. இதுவும் அதே செப்டம்பர் மாதத்தில்தான். ஒரு மாதம் கழித்து இப்போதுதான் பிரச்சினை வெளியே தெரியவந்துள்ளது.
இரண்டாவது குழந்தை
ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்,23 இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவரது மனைவி வசந்தா,21இவர்களுக்கு மோனிஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்தார் வசந்தா. டாக்டர் கொடுத்த தேதியில் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி உத்தனபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
குழந்தைக்கு கை முறிவு
அன்று மாலை வசந்தாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வராததால் அங்குள்ள நர்ஸ்களே வசந்தாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த போது குழந்தைக்கு வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எலும்பு முறிவு குறித்து குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் உடனடியாக குழந்தையையும் தாயையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உறவினர்கள் போராட்டம்
ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து தெரியவந்துள்ளது. தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடைய இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலட்சியமாக வேலை பார்த்த நர்ஸ்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கமிட்டனர். பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து பிரசவத்திற்காக சென்றால் நர்ஸ்கள் அலட்சியத்தினால் அழகான குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டு விட்டதே என பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.