நெடுஞ்சாலையில் வண்டியை நிறுத்தி.. 3வது முறையாக வாகனத்தை மாற்றினார் சசிகலா.. பிரச்சார வேனில் பயணம்
ஒசூர்: சசிகலா சென்னை வரும் வழியில் 3வது முறையாக வாகனத்தை மாற்றியுள்ளார். 3வதாக அவர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வேன் வகை வாகனத்தில் ஏறியுள்ளார்.
பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருந்து இன்று சென்னை நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார் சசிகலா. அவர் தனது கார் முன் பக்கத்தில் அதிமுக கட்சி கொடியை கட்டியிருந்தார்.
ஏற்கனவே, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ரிசார்ட்டில் தங்க சென்ற போதும் தனது கார் முன்பு அதிமுக கொடி கட்டி இருந்தார்.

டிஜிபியிடம் மனு
சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பதால், கட்சிக் கொடியை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று அமைச்சர்கள் டிஜிபியை நேரில் சந்தித்து சமீபத்தில் மனு அளித்திருந்தனர். கொடி விஷயத்தில் அதிமுக தலைமை மிகவும் கறார் காட்டுவதை இந்த சம்பவம் உணர்த்தியது.

ஜூஜூவாடி
இந்த நிலையில்தான், இன்று சசிகலா கர்நாடக எல்லையை தாண்டி ஓசூர் அடுத்த ஜூஜூவாடி என்ற தமிழக எல்லைப் பகுதிக்குள் வரும் போது காவல்துறையினர் அவரது வாகனத்தை மறித்து, அதிமுக கட்சி கொடியை காரில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க உள்ளனர் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரம்
சசிகலா, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அந்த கட்சியில் உள்ள தலைமை தீவிர முயற்சி எடுத்து வருவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.

காரை நிறுத்துவார்
தமிழக எல்லைக்கு சில கி.மீ தூரத்திற்கு முன்பு கார் வந்தபோது அனுமார் கோவில் அருகே காரை நிறுத்திய சசிகலா, ஆஞ்சநேயரை கும்பிட்டார். பிறகு, கீழே இறங்கி, இன்னொரு எஸ்யூவி காரில் ஏறினார். அவரது கார் முகப்பிலும் அதிமுக கொடி இருந்தது. அவர் ஏற்கனவே பயணித்த காரிலிருந்து அதிமுக கொடி நீக்கப்பட்டிருந்தது. இதை ஏன் அவர் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அடையாள அட்டை வைத்துள்ள ஒரு நிர்வாகியின் கார் அதுவாகும். எனவே சட்டப்படி அதில் அதிமுக கொடி இருக்கலாம். எனவே சசிகலா இந்த யுக்தியை கையில் எடுத்தாராம். ஆனால் ஒசூர்-கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் காரை ஓரம் கட்டிய சசிகலா, அதிலிருந்து இறங்கி, பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வேன் மாதிரி வாகனத்தில் ஏறியுள்ளார். பகல் நேரம் என்பதால், இந்த வகை வாகனத்தில் சென்றால்தான், சாலையோரம் நிற்கும் தொண்டர்களுக்கு நன்கு முகம் தெரியும் என்பது ஒரு காரணம். மேலே நின்றபடி உரையாற்ற முடியும் என்பது மற்றொரு காரணமாகும்.

சசிகலா என்ன செய்வார்
இந்த நிலையில், ஒசூர் எல்லையில், சசிகலா பயணித்த காரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம், அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான நோட்டீஸை போலீசார் வழங்கினர். அதை அவர் பெற்றுக் கொண்டார். ஆனால், சசிகலா காரிலிருந்து கொடி அகற்றப்படவில்லை. அவர் அதிமுக கட்சிக்காரர் காரில் பயணிப்பதால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறது காவல்துறை.

ஒசூர் எல்லை
ஜூஜூவாடி எல்லைப்பகுதி எல்லாமே அமமுகவினர் நூற்றுக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். அவர்களுடன் போலீசாரும் எல்லையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஓசூர் எல்லைப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications