கேசிஆர் தலைமையில் சட்டென அணி திரண்ட 3 முதல்வர்கள்.. அகிலேஷ் யாதவும் பங்கேற்பு..விழிக்கும் பாஜக..ஏன்?
ஹைதராபாத்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அணி திரட்டி வருகிறார். இதற்காக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனும் தனது கட்சியை பாரத ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றம் செய்தார். இந்நிலையில் தான் நேற்று தெலங்கானா கம்மத்தில் அவர் தலைமையில் நடந்த மாநாட்டில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இது தேசிய அரசியலில் கவனம் பெற்றிருப்பதோடு வரும் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் வகையில் 3வது அணியை சந்திரசேகரராவ் உருவாக்கி விடுவாரோ? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எனும் கட்சியை தொடங்கி முதல்வரானார். தற்போது அவருக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடியை, சந்திரசேகரராவ் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் மோடி உடனான சந்திப்பை அவர் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் தான் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்த புதிய கட்சியாக பாரத் ராஷ்ட்ர சமிதியை உருவாக்கினார். தற்போது தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் இல்லாத வகையில் சந்திரசேகரராவ் கூட்டணி அமைக்க காய் நகர்த்தி வருகிறார். பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
சந்திரசேகர ராவின் அடுத்த குறி தமிழகம்.. திறக்கப்படுகிறது பாரத் ராஷ்டிரிய சமிதி கிளை!
3வது அணி உருவாக்கும் சந்திரசேகர ராவ்
சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமரான கர்நாடகாவின் தேவேகவுடா, அவரது மகனும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவனும், சந்திரசேகர ராவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். விரைவில் சந்திரசேகர ராவ் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
3 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
இந்நிலையில் தான் கட்சியின் பெயர் மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக தெலுங்கானாவின் கம்மத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை சந்திரசேகர் ராவ் நேற்று நடத்தினார். இதில் பங்கேற்க பாஜகவை எதிர்க்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் 3 மாநில முதல் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதன்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்றனர்.
அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
மேலும் உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தலைவர்கள் அனைவரும் பாஜகவை எதிர்த்து பேசினர். மேலும், மத்திய அரசு ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், உள்நோக்கம் கொண்டு இந்தியாவை பிரித்தாளுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
தேசிய அரசியலில் கவனம்
இந்நிலையில் தான் சந்திரசேகர ராவின் இந்த பொதுக்கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இன்றி 3வது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போதைய கூட்டத்தில் ஆம் ஆத்மியின் 2 முதல்வர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரான பினராயி விஜயன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் இவர்கள் அனைவரும் சந்திரசேகர ராவுடன் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கைகோர்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தற்போது தேசிய அளவில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.