சிக்கிய விஜய் தேவரகொண்டா.. எஸ்சி - எஸ்டி வன்கொடுமை பிரிவில் வழக்கு.. சூர்யா படவிழாவால் சிக்கல்
ஹைதராபாத்: நடிகர் சூர்யாவின் ‛ரெட்ரோ' திரைப்பட விழாவில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையானது. பழங்குடியினர் மக்கள் பற்றி அவர் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியது. இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‛ரெட்ரோ'. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஹைதரபாத்தில் பட புரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார்.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா பாகிஸ்தான் பழங்குடியினர் மக்கள் போல் நடந்து கொள்வதாக அவர் கூறியது சர்ச்சையானது. பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா மன்னிப்பு கோரினார். தான் பேசியதில் உள்நோக்கம் இல்லை. தான் பேசியது யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
பழங்குடியின சமுதாயத்துக்கான இணை நடவடிக்கை மிட்டின் மாநில தலைவர் அசோக் ராதோடு சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா மீது போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛நடிகர் கடந்த ஏப்ரல் மாதம் தனது கருத்தை தெரிவித்தார். அது சர்ச்சையானது. இப்போது புகாரின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 17 ம் தேதி பதிவு செய்யப்பட்டது''என்று கூறியுள்ளார்.
முன்னதாக அந்த விழாவில் பேசுகையில், ‛‛பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.காஷ்மீர் மக்கள் நம்மை போன்றவர்கள் தான். 2 ஆண்டுக்கு முன்பு நான் காஷ்மீர் சென்றேன். ‛குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்தேன். அப்போது அவர்களுடன் எனக்கு பழகும் வாய்ப்பு உள்ளது. அந்த நல்ல நினைவு என்னிடம் உள்ளது.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சொந்த நாட்டு மக்களை கூட கவனிக்க முடியவில்லை. அவர்கள் நம் நாட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது தொடர்ந்தால் பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். பாகிஸ்தான் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார். இந்த பேச்சுக்கு நடுவே தான் அவர் பாகிஸ்தானை பழங்குடியினருடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications