ஆந்திராவில் மாறிய அரசியல்.. சந்திரபாபு நாயுடு-பவன்கல்யாண் கைகோர்ப்பு..ஜெகன்மோகனுக்கு செக்..எப்படி?
ஹைதராபாத்: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி நடக்கும் நிலையில் அவருக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் ஆகியோர் சந்தித்து 2 மணிநேரம் பேசியுள்ள நிலையில் வரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் 2 பேரும் கூட்டணியாக கைகோர்க்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஆந்திர மாநில அரசியலில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் ஜெகன் மோன் ரெட்டியின் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முன்னதாக ஆந்திராவை ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. தற்போது பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கான எம்எல்ஏக்கள் கூட சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை.
ஹேய்.. சந்திரபாபு நாயுடுவா இது?.. ஒருத்தரும் கிட்ட வரலயே.. கடகடனு பஸ்ஸின் டாப்பில் ஏறி நின்று.. வாவ்
பொதுக்கூட்டங்களுக்கு தடை
இந்நிலையில் தான் ஆந்திர மாநிலத்துக்கு 2024ல் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் சந்திரபாபு நாயுடு இறங்கி உள்ளார். ஆளும் கட்சியை எதிர்த்து பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் குண்டூர் மற்றும் நெல்லூர் பொதுக்கூட்டங்களில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். தையடுத்து தற்போது பொதுக்கூட்டங்களுக்கு ஆளும் கட்சி தடை விதித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு-பவன் கல்யான் சந்திப்பு
இந்நிலையில் தான் ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு இன்று ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வந்தார். அரசியலில் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் இவர்கள் 2 பேரும் சுமார் 2 மணிநேரம் வரை பேசினர். இதனால் இவர்களின் சந்திப்பு ஆந்திராவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு சொல்வது என்ன?
இதையடுத்து இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, சந்திர பாபு நாயுடு கூறுகையில், ‛‛நாங்கள் இருவரும் கூட்டணி பற்றி பேசவில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டுமே கூட்டணி பற்றி பேசப்படும். ஆட்சியாளர்களின் அராஜக போக்கை நாங்கள் இருவரும் ஒன்றாக எதிர்க்க வேண்டுமு் என பேசினோம். தேர்தல் கூட்டணி என்பது மாற்றத்திற்கு உட்பட்டது'' என்றார்.
பவன் கல்யான் கூறுவது என்ன?
இதுபற்றி பவன் கல்யான் கூறுகையில், ‛‛2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும். இதனால் அவர்கள் அராஜக போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக விவாதித்தோம். மாநிலத்தில் பொறுப்புணர்வோடு பொறுப்பான நிர்வாகத்தை கொண்டு வருவது எங்கள் முதன்மையான பணியாகும். எங்களுடன் தொடர்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் அரசியல் வியூகங்கள் பற்றி உட்கார்ந்து பேசுவோம்'' என்றார்.
கூட்டணி சாத்தியமா?
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதுபோல் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பவன் கல்யானுக்கும் இடையேயும் பிரச்சனை உள்ளது. தற்போதைய சூழலில் ஆந்திராவில் பாஜகவுடன் பவன் கல்யாண் நெருக்கமாக உள்ளார். ஆனால் பாஜகவிடம் இருந்து சந்திரபாபு நாயுடு ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யான் இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அரசியலில் எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதால் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி ஆந்திராவில் அமையலாம் எனவும், இவர்கள் 2 பேரும் கைகோர்க்கும் பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தலைவலி ஏற்படலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.