சொன்னீங்களே செஞ்சீங்களா? தெலுங்கானாவில் வலம் வந்த பிரதமர் மோடி! கேசிஆர் போஸ்டர்களில் செய்த சம்பவம்!
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த நிலையில் பாஜக அரசு தெலுங்கானாவுக்கு செய்து தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவானது என கேள்வி எழுப்பி வைக்கப்பட்ட பேனர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தெலுங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான மோதல் போக்கு அதிகமாகி வருகிறது.
தெலுங்கானா ஆளுநருடன் மோதல் போக்கு, தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் புழுங்கல் அரிசியை வாங்க வேண்டும் என்ற தெலுங்கானா மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது என அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறி வருகிறது.
எனது போன் தெலுங்கானா அரசால் ஒட்டுக்கேட்கப்படுகிறது.. ஆளுநர் தமிழிசை பகீர் குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி
இதனிடையே கடந்த முறை தெலுங்கானா வந்த பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 'கோ பேக் மோடி' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதோடு மத்திய அரசின் செயல்படுத்தப்படாத வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர் ஹைதராபாத் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது. இதனிடையே மத்தியில் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரதிய ராஷ்டிரிய சமிதி என தேசிய கட்சியாக மாற்றினார் சந்திரசேகர ராவ்.
தெலுங்கானா விஜயம்
இந்த நிலையில் தான் தெலுங்கானாவில் இன்று மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்ட உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, சுமார் 2,768 கோடி செலவில் பல்வேறு சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதோடு 990 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரயில் பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார்.
வாக்குறுதிகள் என்னாச்சு?
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்ததை முன்னிட்டு ராமகுண்டம் பகுதி முழுவதும் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பையாரம் இரும்பு தொழிற்சாலை , ஜவுளி பூங்கா, காசிபேட்டை ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்கள் என்னவானது என பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ஒட்டப்பட்டு இருந்த அந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
மாணவர்கள் கைது
மேலும் பிரதமர் செல்லும் வழியிலும் இதேபோல பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பிரதமர் வருகையை முன்னிட்டு பாஜகவினர் வைத்திருந்த பேனர்களுக்கு அருகிலேயே இந்த பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பிரதமர் வருகையின் போது தெலுங்கானா மாநிலத்திற்கு அழைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ராஷ்டிரிய சமாதி அமைப்பதைச் சேர்ந்த மாணவர்கள் 'கோ பேக் மோடி' என முழக்கம் எழுப்பினர், அவர்களை போலீசார் கைது செய்தனர்.