150 ரூபாய் எல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது.. மத்திய அரசு விலையை உயர்த்த வேண்டும்..பாரத் பயோடெக்
ஹைதராபாத்: மத்திய அரசுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு 150 ரூபாய்க்கு கோவாக்சின் தடுப்பூசியை வழங்குவது கட்டுப்படியாகாது என்றும் இதனால் ஏற்படும் நஷ்டத்தைச் சமாளிக்கவே தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு கோவாக்சின் விற்பனை செய்யப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக இருந்த கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.
இதனால் அடுத்து மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னர், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் 18+ அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு 150 ரூபாய்க்கு வாங்குகிறது. மீதமிருக்கும் 25% தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாரத் பயோடெக்
இந்நிலையில், மத்திய அரசுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு 150 ரூபாய்க்கு கோவாக்சின் தடுப்பூசியை வழங்குவது கட்டுப்படியாகாது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூலப் பொருள்களின் விலை, பாதுகாப்பு நடைமுறைகள், தயாரிப்பில் ஏற்படும் இழப்புகள், விநியோக செலவுகள், வாங்கப்படும் அளவு எனப் பல விஷயங்களைக் கொண்டே தடுப்பூசியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

விலை கட்டுப்படியாகாது
எனவே, தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு கோவாக்சின் தடுப்பூசியை வழங்குவது என்பது கட்டுப்படியாகாது. இதில் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கவே தனியார் சந்தையில் கூடுதல் விலைக்கு கோவாக்சின் தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது. தடுப்பூசி ஆராய்ச்சி, பரிசோதனைகள், உற்பத்திக்குத் தேவையான செட்அப்கள் என பாரத் பயோடெக் இதுவரை 500 கோடி ரூபாயை கோவாக்சின் தடுப்பூசிக்காக முதலீடு செய்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் ஆகும். இந்தத் தடுப்பூசியை இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து பாரத்பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 81% வரை பலனளிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தத் தடுப்பூசி இந்தியாவில் வேகமாகப் பரவிய டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications