தெலுங்கானா போறீங்களா.. மறக்காம மாஸ்க் கொண்டு போங்க.. மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,000-ஐ கடந்துள்ளது. சராசரியாக தினமும் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
உலகளவில் இந்தியா முதலிடம்
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா தொடர்ந்து 7-வது நாளாக முதலிடம் பிடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,31,968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும்படியும் மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 2,000-ஐ கடந்துள்ளது. சராசரியாக தினமும் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
ரூ.1,000 அபராதம்
ஹைதராபாத், ரங்காரெட்டி நகரப் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தெலுங்கானா அரசு பலமுறை வலியுறுத்தியபோதும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு உதவி
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.