மோசமான காங். நிலை.. தென்னிந்தியாவிலும் சரியும் சீட்டுக்கட்டு.. தெலங்கானாவின் முக்கிய தலைவர் ராஜினாமா
ஹைதராபாத்: சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆசாத் கட்சியை விட்டு விலகும்போது ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்த நிலையில் தற்போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில தலைவர்களில் ஒருவருமான எம்.ஏ.கானும், ராகுல் மீது குற்றச்சாட்டை முன்வைத்து விலகியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் இவ்வாறு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து பல மூத்த தலைவர்கள் விலகி வருவது கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் கட்சி தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் இந்த மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது காங்கிரசுக்குள் மட்டுமல்லாது இந்திய தேசிய அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு கட்சியை விட்டு விலகும் தலைவர்கள் தொடர்ந்து ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தே விலகுகின்றனர். தனது ராஜினாமா குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்" என ஆசாத் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இவரைத் தொடர்ந்து தெலங்கானாவின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுகிற அக்கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.ஏ.கான் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இவரும் ராகுல் காந்தி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை" என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, "ராகுல் காந்தி கட்சியின் துணை தலைவராக நிமிக்கப்பட்டதிலிருந்து கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவரது நடவடிக்கைகளே கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். தொகுதி மட்டங்களிலிருந்து கட்சியின் அடிப்படையான கிளைகள் வரை எந்த உறுப்பினருடனும் பொருந்தாத வித்தியாசமான சிந்தனை செயல்முறையை அவர் கொண்டிருக்கிறார். இதன் விளைவு கட்சி வீழ்ச்சியை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்சியை பலப்படுத்த உழைத்த மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்" என்று கான் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணத்தை ராகுல் காந்தி செப்டம்பர 7ம் தேதி தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications