என்னை ஏன் இழுக்குறீங்க? சீறிய தமிழிசை.. ஆளுநராக போகும் தமிழக பாஜக "தலை".. டெல்லி போடும் போடு!
ஹைதராபாத்: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான பாஜக நிர்வாகி ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அங்கு மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது.
இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். ஆளுநராக தமிழிசை இந்த நியமனத்தை நிராகரித்தார். இது மோதல் தீவிரம் அடைய காரணம் என்கிறார்கள்.
யார் வீட்டில் தெலுங்கில் பேசுகிறார்கள்? பொய்மான் ஆக வேண்டாம் தமிழிசை? முரசொலி அட்டாக்
மோதல்
அரசு குறித்து ஆளுநர் கருத்து தெரிவிப்பது, சில மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது என்று முக்கியமான புகார்களை தமிழிசை மீது கேசிஆர் தரப்பு வைத்து வருகிறது. இதன் காரணமாக தமிழிசை தெலுங்கானாவில் எங்காவது சென்றால் அவரை வரவேற்க கூட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தெலுங்கானா பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டார். மாறாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் பணிகளில் கவனம் செலுத்தினார். இவர் சென்னைக்கு வந்த அளவிற்கு கூட தெலுங்கானாவிற்கு செல்லவில்லை.
தெலுங்கானா
இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருவதாக கேசிஆர் குற்றஞ்சாட்டி உள்ளார். தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறி அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தாவ சொல்லி பேரம் நடந்ததாக கூறி, இந்த வீடியோவையோ சந்திரசேகர ராவ் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் ராமச்சந்திர பாரதி, சிம்ஹாஜி மற்றும் நந்த குமார் என்ற மூன்று நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
துஷார்
இதில்தான் தற்போது தமிழிசை பெயர் அடிபட்டு உள்ளது. அதன்படி டிஆர்எஸ் கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டில், தமிழிசையின் கவர்னர் மாளிகையும், அவரின் தனி செயலாளர் துஷார் என்பவரும் இந்த எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தலையிட்டதாக குற்றம்சாட்டி உள்ளது. அதாவது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தாவ சொல்லி இவர்கள் அழுத்தம் கொடுத்ததாக டிஆர்எஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இதை தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த விஷயத்தில் என்னை ஏன் உள்ளே இழுக்குறீங்க என்று கடுமையாக தமிழிசை பேசினார் .
மறுப்பு
இந்த நிலையில்தான் அடுத்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 7 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நிலை சரி இல்லாத மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனையும் சேர்த்து 7 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு மட்டும் துணை நிலை ஆளுநராக நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானாவிற்கு தனியாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர்
இதில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக ஆளுனர் பதவி என்பது அரசியலில் ரிட்டயர்மெண்ட் மாதிரி. அதாவது அரசியலில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றால் போதும், அவருக்கு ஆளுநர் பதவியை கொடுத்து விடலாம். மாநில அரசியலில் தங்களுக்கு ஏற்றபடி செயல்படாத நிர்வாகிகளை இப்படி பாஜக ஆளுநராக போடுவது வழக்கம் . இதன் மூலம் அவர்களின் அதிருப்தியையும் சம்பாதிக்காமல், அதே சமயம் அவர்களை கட்சிக்குள்ளும் வைத்து இருக்காமல் ஓரம் கட்ட முடியும். பலரை பாஜக இப்படித்தான் ஓரம்கட்டி இருக்கிறது. அதன்படிதான் முக்கியமாக மூத்த நிர்வாகி ஒருவர் ஆளுநராக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.