ரியல் எஸ்டேட் மோசடி! நடிகர் மகேஷ்பாபு 27ல் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!
ஹைதராபாத்: ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி விவகாரத்தில் நடிகர் மகேஷ்பாபுவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் மகேஷ்பாபு. சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய இரு ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் விளம்பர தூதராக மகேஷ்பாபு உள்ளார்.
இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போதுதான் மகேஷ்பாபு விளம்பர தூதராக இருப்பது தெரியவந்தது.
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் உள்ள இரு நிறுவனங்களும் தகுதியே இல்லாத வீடுகளை விற்றது தெரியவந்தது. இதனால் இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் மகேஷ்பாபு 27ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமலாக்கத் துறை
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: ரூ 5.9 கோடியை மகேஷ் பாபு இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளார். அதில் 3.4 கோடி காசோலையாகவும் ரூ 2.5 கோடி ரொக்கமாகவும் மகேஷ் பாபுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
இந்த பணம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிளாட்டுகள்
அனுமதநியே பெறப்படாத பிளாட்டுகளை எல்லாம் கோடிக்கணக்கில் விற்றது, ஒரே பிளாட்டை பலருக்கு விற்றது, போலியான பத்திரப்பதிவு வாக்குறுதிகளை கொடுத்தது என ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகேஷ் பாபு
நடிகர் மகேஷ் பாபு, இந்த மோசடியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அவர் விளம்பர தூதராக இருந்தமைக்காக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற பணம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
ரூ 100 கோடி
இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ரெய்டில் முக்கிய ஆவணங்களும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 100 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் சம்பாதித்த ரியல் எஸ்டேட் நிறுவனர்களின் சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
ஊதியம் வாங்கும் நடிகர்கள்
இந்திய சினிமாவில் அதிக அளவில் ஊதியம் வாங்கும் நடிகர்களில் மகேஷ்பாபுவும் ஒருவர்! இவர் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகனாவார். சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.
நிதியுதவி
இவர் சென்னை லயோலா கல்லூரியில்தான் படித்துள்ளார். இவர் மகேஷ் பாபு அறக்கட்டளை என்பதை தொடங்கி பலருக்கு நிதியுதவி செய்து வருகிறார். குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்து வருகிறார். இதற்காக ரெயின்போ மருத்துவமனை மற்றும் ஆந்திரா மருத்துவமனை ஆகியவற்றுடன் டை அப் வைத்துள்ளார். மேலும் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
அங்கன்வாடி மையங்கள்
அந்த கிராமங்களில் பள்ளி, அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சாலைகள், வடிகால்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி வருகிறார். அது போல் மருத்து முகாம்கள், இலவச மருந்துகளையும் வழங்கி வருகிறார். கொரோனா காலத்தில் அந்த கிராமங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட செய்தார்.












Click it and Unblock the Notifications