கடிக்க பாய்ந்த நாய்.. பயத்தில் மாடியில் இருந்து குதித்த 'ஸ்விக்கி' ஊழியர்.. ஹைதராபாத்தில் பரிதாப பலி
ஹைதராபாத்: உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஸ்விக்கி நிறுவன ஊழியரை வாடிக்கையாளரின் வளர்ப்பு நாய் துரத்தியதில் அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளரின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நேரிட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தலையும் அரசும் நீதிமன்றங்களும் வழங்கினாலும், அவரை தொடர்ந்து காற்றில் பறக்க விடப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

"நாய்கள் அஜாக்கிரதை"
சமீபகாலமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்க்கப்படும் நாய்களால் அக்கம்பக்கத்தினர் அதிக தொந்தரவுக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. பெங்களூரில் லிப்டில் சென்ற சிறுவன் ஒருவனை ஒரு பெண் வைத்திருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் கடித்தது. ஆனால், அந்தப் பெண்ணோ எதுவும் நடக்காதை போல அங்கிருந்து நகன்றுவிடுகிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் புயலை கிளப்பியது. இதேபோல், பெங்களூரில் உணவு டெலிவரி ஊழியரை வாடிக்கையாளரின் நாய் மர்ம உறுப்பில் காயம் ஏற்படுத்திய சம்பவமும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

மீண்டும் ஒரு துயரம்
இதன் தொடர்ச்சியாக, அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் விதித்தன. அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்ப்போர் அவற்றை கட்டாயம் கட்டிப்போட்டிருக்க வேண்டும்; எந்த மாதிரியான நாய்களை வளர்க்க வேண்டும்; அதிக சத்தம் எழுப்பும் நாய்களை வளர்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இவற்றை பெரும்பாலான நாய் வளர்ப்போர் உதாசீனப்படுத்தி வருகிறார்கள். இந்த அலட்சியத்தால் ஹைதராபாத்தில் ஒரு உயிரே போயிருக்கிறது.

கடிக்க பாய்ந்த நாய்
ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடந்த வாரம் இவருக்கு உணவு ஆர்டர் வந்துள்ளது. இதையடுத்து, அவர் ஆர்டர் செய்திருந்த உணவை எடுத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார் ரிஸ்வான். அப்போது அந்த வாடிக்கையாளர் கதவை திறந்ததும், உள்ளே இருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ரிஸ்வானை கடிக்க பாய்ந்துள்ளது.

மாடியில் இருந்து குதித்து..
நாய்க்கு பயந்து ரிஸ்வான் மாடிக்கு ஓடியுள்ளார். நாய் கட்டி வைக்கப்படாததால் அது ரிஸ்வானை ஆக்ரோஷமாக துரத்திக் கொண்டு சென்றுள்ளது. வாடிக்கையாளர் நாயை கூப்பிட்டும் அது அவரது பேச்சுக்கு கட்டுப்படவில்லை. இதனால் நாய் கடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் மூன்றாவது மாடியில் இருந்து ரிஸ்வான் கீழே குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்த வாடிக்கையாளர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரிஸ்வான் உயிரிழந்தார். இதுகுறித்து ரிஸ்வான் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாயின் உரிமையாளர் மீது ஐபிசி 304 (a) (அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுதல்) பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications