லோக்சபா தேர்தல்: தெலுங்கானாவில் பாஜகவுக்கு 'இன்ப அதிர்ச்சி' - காங்கிரஸுக்கு 'ஷாக்' - India TV சர்வே
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவுக்கு 'ஜாக்பாட்' இன்ப அதிர்ச்சி கிடைக்குமாம்; காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கும் என்கிறது 'இண்டியா' டிவி சேனல் கருத்து கணிப்பு;
தெலுங்கானா மாநிலத்தில் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இப்போதைய பிஆர்எஸ் கட்சி (முந்தைய டிஆர்எஸ்) 9 இடங்களையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4 இடங்களையும் காங்கிரஸ் 3; ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியது. இது பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்கின்றன தேர்தல் கணிப்புகள். ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற பாஜகவின் கனவு மண்ணாகிப் போய்விடும் என்பதும் கருத்து கணிப்புகள்தான்.
ஆனால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ பாஜகவுக்கு நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கின்றன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தெலுங்கானா முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக "இண்டியா டிவி" - சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்: ஆளும் பிஆர்எஸ் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றுமாம்; பாஜகவுக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைக்குமாம்; காங்கிரஸுக்கு வெறும் 2 தொகுதிகளில்தான் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 1 லோக்சபா தொகுதியில் வெல்லும் வாய்ப்பிருக்கிறது. அதாவது மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் மீண்டும் வெல்வாராம்.
வாக்கு சதவீத விவரம்: 2024 லோக்சபா தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 40% வாக்குகளைக் கைப்பற்றுமாம். பாஜக 28%; காங்கிரஸ் 23% வாக்குகளைப் பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு. 2019 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 41.71% வாக்குகளையும் காங்கிரஸ் 29.79% வாக்குகளையும் பாஜக 19.65% வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications