‛ஆபரேஷன் சவுத்’ இந்தியா.. நடிகர்களை குறிவைக்கும் பாஜக.. ஜூனியர் என்டிஆரை அமித்ஷா சந்திப்பது ஏன்?
ஐதராபாத்: ‛ஆபரேஷன் சவுத் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் திரை பிரபலங்களை பாஜக குறிவைத்து வரும் நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலுங்கு நடிகரான ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோவான ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேச உள்ளார். அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சந்திப்புக்கு பின்னணியில் முக்கிய காரணங்கள் உள்ளன.
Recommended Video
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். இவர் தற்போது பாஜகவுக்கு எதிராக கொள்கையில் உள்ளார். சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக போட்டியிடும் நோக்கத்தில் வியூகங்கள் வகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பதவியிலும் அவர் கண் வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா
இந்நிலையில் தான் தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள முனுகோட் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமித்ஷா பங்கேற்றார். அமித்ஷா முன்னிலையில் ராஜகோபால் ரெட்டி பாஜகவில் இணைய உள்ளார். இதையடுத்து மீண்டும் அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆருடன் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு நடிகரான ஜூனியர் என்டிஆரை, அமித்ஷா சந்தித்து பேச உள்ளார். இதனை தெலங்கானா மாநில பாஜகவின் பொதுச் செயலாளர் குஜ்ஜுலா பிரேமேந்தர் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி பாஜக சார்பில், ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததன் பேரில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். இவர்கள் 2 பேரும் ஷம்ஷாபாத் நோவாடெல் ஹோட்டலில் நடைபெறும்'' என கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்ட சந்திப்பு
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் என்வி சுபாஷ் கூறுகையில், ‛‛ஜூனியர் என்டிஆர் உடன் அமித் ஷா சந்திக்க உள்ளார். முனுகோடு பொதுக் கூட்டத்தைத் தவிர பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் இதுவும் ஒன்று. இது திடீரென்று ஏற்படுத்தப்பட்ட சந்திப்பு இல்லை. முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று தான் இது'' என கூறியுள்ளார்.

என்டிஆர் சந்திப்புக்கான காரணம்
அதாவது பாஜக ‛ஆபரேஷன் சவுத் இந்தியா' எனும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தென் இந்திய மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெறவும், கட்சியை பலப்படுத்தவும் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் சமீபத்தில் இளையராஜா உள்பட ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேரும் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதன் தொடர்ச்சியாக தான் இன்று அமித்ஷா ஜூனியர் என்டிஆரை சந்திக்க உள்ளார். ஜூனியர் என்டிஆரின் தாத்தா சீனியர் என்டிஆர் ஆந்திராவின் முதல் அமைச்சராக இருந்தவர். இவர்களின் குடும்பம் சினிமாவில் பிரபலமாக இருப்பது போலவே அரசியலிலும் ஜொலித்தது. அதனடிப்படையில் தான் அமித்ஷா, ஜூனியர் என்டிஆர் சந்திப்பு நிகழ உள்ளது.

திரை பிரபலங்களுக்கு பாஜக குறி
மேலும் தென் இந்தியாவில் பாஜக கர்நாடகத்தில் மட்டும் தான் காலூன்ற ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை பொறுத்தமட்டில் சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் ரஜினியும் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். அதன்பிறகு அரசியல் பேசியதாக ரஜினி தெரிவித்த நிலையில் விரைவில் அவர் பாஜகவில் கைகோர்க்கலாம் அல்லது அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் இணையதளங்களில் வட்டமடிக்கும் நிலையில் தான் ஜூனியர் என்டிஆருடன் அமித்ஷா சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications