பருமன் பிரியங்காவுக்கு கணவன் ஆசையாக தந்த ஸ்வீட்.. மறு நொடியே அந்த பயங்கரம்.. ஆடிப்போன கடப்பா
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மரணம் ஒன்று தற்போது அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது.. மனைவியின் உடல் எடையைக் காரணமாகக் காட்டி, கணவனே அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இந்தச் சம்பவம் தொடர்பாக கிரண் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது?
கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூரைச் சேர்ந்த 28 வயதான வி. கிரண் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிரியங்கா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது..

ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை சுமுகமாகவே சென்றுள்ளது.. ஆனால், பிரியங்காவிற்கு இருந்த உணவுப் பழக்கவழக்கம் மற்றும் அவரது உடல் எடை அதிகரிப்பு ஆகியவை கிரணுக்குப் பிடிக்காமல் போனதாகக் கூறப்படுகிறது..
பிரியங்காவுக்கு கிரண் தந்த ஸ்பெஷல் ஸ்வீட்
பிரியங்கா சுமார் 110 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அவரது எடையைக் குறைக்க கிரண் பலமுறை வற்புறுத்தியும் அவர் அதை கவனிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. இதனால் ஆத்திரமடைந்த கிரண், தனது மனைவியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடந்த மே 3ம் தேதி இரவு, பிரியங்காவிற்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகளை கிரண் வாங்கி வந்துள்ளார்.
அந்த ஸ்வீட்டில் யாருக்கும் தெரியால் விஷத்தைக் கலந்து மனைவியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.. அதை சாப்பிட்ட பிரியங்கா அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.. மனைவி இறந்துவிட்டதை உறுதி செய்த கிரண், எதுவும் தெரியாதது போல நடித்து பிரியங்காவின் மரணம் இயற்கையானது என உறவினர்களிடம் நம்ப வைக்க முயன்றுள்ளார்..
அதிர வைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
இருந்தாலும் பிரியங்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.. பிரியங்காவின் உடல், உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.. அந்த ரிப்போர்ட்டும் வந்தது.. அதில் விஷம் சாப்பிட்டு பிரியங்கா உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கிரணைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரே மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது கிரண் தெரிவித்த தகவல்கள் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டதாம்.
தனது மனைவியின் அதிக உடல் எடை காரணமாகச் சமூகத்தில் தனக்கு அவமானம் ஏற்படுவதாகவும், அதனால் அவர் எடையைக் குறைக்கச் சொன்னதை அவர் கேட்காததாலும் இந்தக் கொடூரத்தைச் செய்ததாக கிரண் பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயிலில் கிரண்
இதையடுத்து, மே 5ம் தேதி கிரணை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்த ப்ரொத்தத்தூர் காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.. உடல் எடையைக் காரணமாகக் காட்டி ஒரு பெண்ணைக் கணவனே கொலை செய்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. பிரியங்காவின் உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உறவுகளில் புரிதல் இல்லாதபோது ஏற்படும் விளைவுகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது..!!!












Click it and Unblock the Notifications