நெற்றியில் “நாமம்” காவி உடையில் ராமனுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர்.. தமிழ் மொழி குறித்து புகழாரம்
ஐதராபாத் : மகான் ராமானுஜர் பக்தி மார்க்கத்தில் தமிழ்மொழிக்கு சமமான முக்கியத்துவத்தை வழங்கினார் எனவும், அவரது பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது என ஐதராபாத்தில் நடைபெற்ற ராமானுஜரின் சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வைணவ மகான் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான 216 அடி உயர சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு முன் செயற்கை நீர்வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது.
மகான் ராமானுஜர் சிலை
தாமரை மலரில் இருந்து ராமானுஜரின் சிலை வருவது போலவும், அதற்கு அபிஷேகம் நடப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
45 ஏக்கரில் சுமார் 1000 கோடி ரூபாயில் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களை சேர்ந்த 2,700 சிற்பிகள் இதில் பங்கேற்றனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட சமத்துவ ராமானுஜரின் சிலை, 9 மாதமாக 1,600 பாகங்களாக செய்யப்பட்டது. உதிரிபாகங்கள் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 60 சீன நிபுணர்களால் சிலை உருவாக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி
சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பலர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொள்ளாத நிலையில், அது சர்ச்சையானது. இந்நிலையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நெற்றியில் நாமத்துடன், காவி உடையுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசையும் உடனிருந்தார்.
தலித் மக்களுக்காக உழைத்தவர்
தொடர்ந்து பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் முன்னதாக நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர் தீபாராதனை காட்டி வழிபாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலை இளைஞர்களை ஊக்குவிக்கும் எனவும், இந்த சிலை அவரது அறிவு, பற்றின்மை மற்றும் இலட்சியங்களின் சின்னமாகும் எனப் பேசினார். வளர்ச்சிக்காக உங்களின் வேர்களை விட்டுவிடுவது முக்கியமல்ல எனவும், ராமானுஜாச்சாரியார் தலித் சமூகத்திற்காக உழைத்தவர் எனவும் பிரதமர் கூறினார்.
தமிழ்மொழிக்கு முக்கியத்துவம்
ராமானுஜாச்சார்யா அவர்கள் பக்தி மார்க்கத்தில் தமிழ்மொழிக்கு சமமான முக்கியத்துவத்தை வழங்கினார், அவரது பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது எனவும், சமத்துவத்தின் உண்மையான பாதுகாவலராகவும், கோயிலில் தலித்துகள் நுழைவதற்கும், ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு சமத்துவத்தை ஏற்படுத்தவும் பாடுபட்டவர் அவர் என பேசிய பிரதமர், ராமனுஜரின் சமத்துவக் கருத்துகள் மூலம் திருமணம் மற்றும் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அநீதியை அடையாளம் கண்டு அகற்ற முயன்றார் எனவும், அம்பேத்கர் ஸ்ரீ ராமானுஜரை பின்பற்றுபவர் அனைவருக்கும் சமமான சமூகம் குறித்த அவரது கொள்கைகளை கடைபிடித்தவர் எனவும் பிரதமர் பேசினார்.