அல்லு அர்ஜூன் வீட்டை தாக்கியவர்களுக்கு உடனே ஜாமீன்.. ரேவந்த் ரெட்டிக்கு எதிராக ரசிகர்கள் குமுறல்
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது நேற்று சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னர் எடுத்துக் கொண்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அல்லு அர்ஜூன் வீடு மீதான தாக்குதலில் தொடர்பிருக்கிறதா? என்கிற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியீட்டில் ரேவதி என்ற பெண் ரசிகர் மரணம் அடைந்ததை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சர்ச்சையாக தெலுங்கானாவை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. புஷ்பா 2 பட சிறப்பு வெளியீட்டு நிகழ்வில் ரசிகர் இறந்ததற்கு நடிகர் அல்லு அர்ஜூன்தான் காரணம் என கூறி தெலுங்கானா போலீஸ் அதிரடியாக கைது செய்தது. பின்னர் ஜாமீனில் உடனே விடுதலையானார் அல்லு அர்ஜூன்.

அதேநேரத்தில் அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்து ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் ஆதரவு தந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா சட்டசபையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூனை கடுமையாக விமர்சித்தார். ரசிகர் ஒருவர் இறந்துவிட்டது தெரிந்தும் ரோட் ஷோ நடத்துகிற மனிதரை எப்படி தெலுங்கு சினிமா உலகம் ஆதரிக்கிறது? அவருக்கு என்ன கை, கால் உடைந்துவிட்டதா ? கிட்னி செயலிழந்ததா? என சரமாரியாகவும் கேள்வி எழுப்பி இருந்தார் ரேவந்த் ரெட்டி.
இதற்கு பதிலடி தந்த அல்லு அர்ஜூன், என் 22 ஆண்டுகால உழைப்பை நாசமாக்குகிறார்கள்; என் பெயரை கெடுக்க பெரும் சதி நடக்கிறது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென நேற்று உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் அல்லு அர்ஜூன் வீடு மீது சராமரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டுக்குள் நுழைந்து பூந்தொட்டிகளை உடைத்தனர்; வீடு மீது தக்காளிகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புஷ்பா பட சிறப்பு வெளியீட்டு நிகழ்வில் உயிரிழந்த ரசிகையின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நட்ட ஈடு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே அல்லு அர்ஜூன் வீடு மீதான தாக்குதலுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு முந்தைய நாள், அல்லு அர்ஜூனை கடுமையாக விமர்சித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, மறுநாளே அல்லு அர்ஜூன் வீடு மீதான தாக்குதலைக் கண்டித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் வீடு மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. அத்துடன் அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பிஆர்எஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. இதனால் அல்லு அர்ஜூன் வீடு மீதான தாக்குதலின் பின்னணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி இருக்கிறாரா? என்கிற கேள்வியையும் அல்லு அர்ஜூன் ரசிகர்களும் பிஆர்எஸ் தொண்டர்களும் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications