ரோஹித் வெமுலா தலித்தே கிடையாது.. 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு முடித்து வைப்பு.. அனைவரும் விடுதலை
ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் வெமுலா சக்கரவர்த்தி. இவர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்தார். இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் அம்பேத்கர் மாணவர் அமைப்பு மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதுபற்றி விசாரணை நடத்திய பல்கலைக்கழகம் ரோஹித் வெமுலா உள்பட சிலரை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து 2016 ஜனவரி 17ல் விடுதி அறையில் ரோஹித் வெமுலா தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது. இந்தியா முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தலித் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேய்யா மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து ரோஹித் வெமுலா வழக்கு தொடர்பாக நீதிபதி ரூபன்வாலா தலைமையில் கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைத்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் அறிக்கையில் ரோஹித் வெமுலா தலித் இல்லை என்றும், அவரது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பலரும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தான் 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் தரப்பில் ரோஹித் வெமுலா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதற்கான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் வெமுலா தலித் இல்லை எனவும், அவரது சாதிச்சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா என்பவர் மாலா சமூகத்தை சேர்ந்தவர். இது தலித் பிரிவல் உள்ளது. ஆனால் ரோஹித் வெமுலாவின் தாய் ஓபிசி பிரிவை சேர்ந்தவர். இதனால் தான் குழப்பம் உள்ளது. ஆனால் ராதிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் எஸ்சி என்று ரோஹித் வெமுலா அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதான் பிரச்சனையாக மாறியது. இதற்கிடையே இந்த அறிக்கை தங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா கூறியுள்ளார். மேலும் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டிஜிபி ரவி குப்தா கூறுகையில், ‛‛இந்த அறிக்கை என்பது 2018 ல் உருவாக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது பல குழப்பங்களை சிலர் கிளப்பினர். ரோஹித் வெமுலாவின் தாய் சில சந்தேகங்களை எழுப்பினர். இதனால் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இந்த கிளீன்ஷிட் அறிக்கையால் இந்த வழக்கில் குற்றம்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அப்போதைய செகந்திராபாத் எம்பி பண்டாரு தத்தாத்ரேயா, எம்எல்சி என் ராம்செந்தர் ராவ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும், அப்போதைய ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் பி அப்பா ராவ் உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications