பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டர்! அதிரடி காட்டிய பவன் கல்யாண்! ஜனசேனாவில் இருந்து நீக்கம்
ஹைதராபாத்: பிரபல நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா (இவர் ஜானி மாஸ்டர் ) என அழைக்கப்படுகிறார். இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதை அடுத்து ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் தெலுங்கில் சூப்பர் டூப்பர் பாடல்களுக்கு நடனம் அமைத்து வருகிறார்.

தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார்.
இப்படி புகழ் பெற்ற ஜானி மாஸ்டர் மீது 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார். அதாவது அந்த பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய போது சென்னை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
அது போல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னை பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜானி மாஸ்டர் தொடர்ந்து இது போல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர், ஆந்திரா மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து பவன் கல்யாண், ஜானி மாஸ்டரை தனது கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். ஹேமா அறிக்கை வெளியாகி புயலை கிளப்பிக் கொண்டிருந்தது.
அது போல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு கமிட்டி வேண்டும் என நடிகை சமந்தா கேட்டிருந்தார். இந்த சூழலில் முன்னணி நடன இயக்குநர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications