தெலுங்கானா: சாதி சனத்தை நம்பி கமரெட்டி தொகுதியில் கேசிஆர்- மண்ணை கவ்வ வைக்க போவதாக காங். சபதம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவ் வழக்கமாக போட்டியிடும் கஜ்வெல் தொகுதியுடன் இம்முறை கமரெட்டி தொகுதியிலும் களமிறங்குவதாக அறிவித்திருப்பதால் தேர்தல் களம் இப்போதே தகிக்கிறது.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் மட்டுமே பெண்கள். 115 வேட்பாளர்களில் 7 வேட்பாளர்கள் மட்டுமே புதுமுகங்கள். எஞ்சிய அனைவரும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்.

முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். இம்முறை கூடுதலாக கமரெட்டி தொகுதியிலும் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கமரெட்டி தொகுதி விஐபி தொகுதியாக உருவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பிஆர்எஸ் தொண்டர்கள், கமரெட்டி தொகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் கமரெட்டி தொகுதிதான் சந்திரசேகர ராவின் பூர்வீகம். இளம் வயதில் இங்குதான் வாழ்ந்தார். அவரது ரத்த உறவுகள் இங்குதான் உள்ளனர். கமரெட்டி தொகுதியின் மண்ணின் மைந்தன் சந்திரசேகர ராவ் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் இத்தொகுதியில் தொடர்ந்து வென்று வந்த கம்பா கோவர்தனுக்கு வேறு ஒரு முக்கிய பதவியை தருவார் என்பது தங்களது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே கமரெட்டி தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவை வீழ்த்தி மண்ணை கவ்வ வைப்பேன் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான முகமது அலி சபீர். இது தொடர்பாக சபீர் கூறுகையில், கமரெட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியையும் தோல்வியையும் நான் பெற்றிருக்கிறேன். என் மீது இத்தொகுதி மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். கஜ்வெல் தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என பயந்து போய்தான் சொந்தங்களை நம்பி கமரெட்டி தொகுதியிலும் சந்திரசேகர ராவ் போட்டியிடுகிறார். இங்கேயும் அவரை தோற்கடிப்பது உறுதி. இத்தொகுதியிலும் தோற்றுப் போகும் சந்திரசேக ராவ், அரசியலுக்கு வருவதற்கு முன் பார்த்து வந்த பாஸ்போர்ட் ஏஜெண்ட் போன்ற நிலைக்கு கீழே தள்ளப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications