ஜெய் ஷானு ஒருத்தர் இருப்பாரே, யார் அவர்? வாரிசு அரசியல் என சொன்ன மோடிக்கு.. கேசிஆர் கட்சி நச் பதிலடி
ஹைதராபாத்: குடும்ப அரசியல் குறித்து தெலங்கானா முதல்வர் கேசிஆரை பிரதமர் மோடி தாக்கி பேசி இருந்த நிலையில், அதற்கு டிஆர்எஸ் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்,
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரும் முன்பு, ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம் ஆனதைக் கொண்டாடி நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அதேபோல அங்கு பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், தெலங்கானா முதல்வர் கேசிஆரை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
ஸ்டாலின் பெயரை சொன்ன முருகன்.. அடுத்த வார்த்தை சொல்ல முடியாத அளவு எழுந்த கோஷம்! வியந்து பார்த்த மோடி
பிரதமர் மோடி
ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "தெலங்கானா போராட்டம் என்பது ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி செய்வதற்காக இல்லை. குடும்ப அரசியல் காரணமாக நாட்டின் இளைஞர்களுக்கு அரசியலில் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. குடும்ப கட்சிகள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்த கட்சிகள், எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்தும் மட்டுமே யோசிக்கின்றன. குடும்ப அரசியல் என்பது அரசியலுக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே பிரச்சினை" என்று கடுமையாக தாக்கி பேசினார்.
வெற்று வாக்குறுதி
இந்நிலையில், இதற்கு தெலங்கானா முதல்வர் கேசிஆர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கேசிஆர் கூறுகையில், " இங்கு வெற்று பேச்சுக்களும் வெற்று வாக்குறுதிகளும் அதிகமாகவே உள்ளது. நாட்டின் நிலைமை மோசமாகி வருகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மகிழ்ச்சியற்று உள்ளனர்" என்று தெரிவித்தார்.
தவிர்த்த கேசிஆர்
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளத் தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க கேசிஆர் முயல்கிறார். இதற்காக அவர் நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை கேசிஆர் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவை சந்திக்கக் கர்நாடகா சென்றுள்ளார். இதனால் அவர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கவில்லை. கடந்த 4 மாதங்களில் தெலங்கானா முதல்வர் கேசிஆர் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது இது 2 முறையாகும்.
தேசிய அரசியல்
கேசிஆர் மேலும் பேசுகையில், "தேவே கவுடாவையும், எச்.டி.குமாரசாமியையும் சந்தித்தேன். பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம். தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா மாறும்... இந்தியா மாற வேண்டும். அதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நாட்டின் நிலையை மாற்ற வேண்டும். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் சில முக்கிய தகவல்கள் வெளியாகும்.
75 ஆண்டுகள்
இந்த ஆண்டுடன் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இப்போதும் மின்சாரம், குடிநீர், பாசனத் தண்ணீர் போன்றவற்றுக்காக நாம் தவித்து வரும் சூழலே உள்ளது. அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். இந்தியா மாறுவதைக் காண வேண்டிய கடமை நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video
யார் ஜெய் ஷா
பிரதமர் மோடியின் குடும்ப அரசியல் குறித்த கருத்துக்கு கேசிஆர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. அதேநேரம் டிஆர்எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிரிஷாங்க் மன்னே கூறுகையில், "பிரதமர் பரிவர்வாத் பற்றி மட்டுமே பேசினார். அப்படியானால், இந்திய கிரிக்கெட்டை வழிநடத்த ஜெய் ஷா (மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்) யார்? ராஜ்நாத் சிங் மற்றும் அவரது மகனுக்கு பாஜகவில் என்ன வேலை. பிரதமர் மோடி"தெலுங்கானா பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை?"" என்று கடுமையாகச் சாடினார்.