"மாபெரும் அழிவு!" இந்தியாவில் தாலிபான்களா.. பகீர் கிளப்பிய கேசிஆர்! பாஜக மீது பரபர அட்டாக்
ஹைதராபாத்: பாஜகவை தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருபவர்களில் முக்கியமானவர் தெலங்கானா முதல்வர் கேசிஆர்.. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாட்டை சிலர் தாலிபான்கள் ஆட்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அங்குள்ள மாநில அரசுகளுடன் ஆளுநர்களுக்குத் தொடர்ந்து மோதல் போக்கே இருந்து வருகிறது. தெலங்கானாவிலும் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
அங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். மேலும், அவர்கள் பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகக் கடுமையான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
கர்நாடகா தேர்தல்:6 மாவட்டங்களின் 40 தொகுதிகளில் சர்வே படையை களமிறக்கிய தெலுங்கானா முதல்வர் கேசிஆர்!
தெலங்கானா முதல்வர்
தெலங்கானா முதல்வர் கேசிஆர் தேசிய அளவிலும் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணியை அமைக்க முயன்று வருகிறார். இதன் காரணமாகவே அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தனது கட்சி பெயரையும் பாரத ராஷ்டிரிய சமிதி என்று மாற்றிக் கொண்டார். இதனிடையே கேசிஆர் மீண்டும் பாஜக மீது மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாட்டில் மத மற்றும் சாதிய மோதல்களைச் சிலர் பரப்பி வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான் போன்ற நிலைமை ஏற்படும் என்று கடுமையான கருத்துகளைக் கூறியுள்ளார்.
தாலிபான் போன்ற சூழல்
இது தொடர்பாக அவர் பேசுகையில், "மத, சாதி வெறியை வளர்த்தால், மக்கள் பிளவுபடுவார்கள். இதை விஷயத்தை நாம் பின்பற்றினால் நாம் வாழும் இடமே நரகமாகவிடும். அதன் பின்னர் ஆப்கனில் தாலிபான் ஆட்சியில் எந்த சூழல் ஏற்பட்டு இருக்கிறதோ.. அதேபோன்ற ஒரு சூழல் ஏற்படும்.. அது பயங்கரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இந்த வெறுப்பு நாட்டின் உயிர்நாடியை எரித்து விடும். எனவே, இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. மத்தியில் முற்போக்கு சிந்தனையும், பாரபட்சமும் இல்லாத அரசு அமைந்தால்தான் நாடும்,
இழப்பு
மாநிலமும் முன்னேற்றம் அடையும்.. வரும் காலத்தில் தெலங்கானாவை வைத்து இந்திய அரசியலே மாறப் போகிறது. தெலுங்கானாவின் ஜிஎஸ்டிபி குறைந்துள்ளது. இதற்கு நாம் காரணமில்லை. மத்திய அரசு நமக்கு இணையாகச் செயல்படத் தவறிவிட்டதே இதற்குக் காரணம். தெலுங்கானா மாநிலம் உருவான போது மாநிலத்தின் ஜிடிபி 5 லட்சம் கோடியாக இருந்தது.. இப்போது அது 15 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலுங்கானாவுக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதலீடு
இதை நான் சொல்லவில்லை.. இந்த டேட்டா அனைத்தும் பொருளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சிஏஜி அளித்த டேட்டா. தெலங்கானா அரசு அனைத்து மக்களையும் சமமாகவே நடத்துகிறது. வகுப்புவாத மற்றும் சாதிய வெறுப்பு நாட்டை வீணாக்கும். நாடு இப்படி ஒரு குழப்பத்தை எதிர்கொண்டால், தாலிபான்களைப் போல மாறினால், யார் தான் முதலீடு செய்ய வருவார்கள்? அதன் பின்னர் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். இப்போதுள்ள தொழிற்சாலைகள் கூட இருக்காது.. மூடிவிட்டுப் போய்விடுவார்கள்..
தீய முயற்சிகள்
ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு தொடரும் சமூகத்தில் அமைதி எப்படி இருக்கும்.. நாட்டை தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் தீய முயற்சிகள் இங்கு எப்படித் திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாட்டில் தண்ணீர், மின்சாரத்திற்கு ஏராளமான வளங்கள் இருந்தாலும், மத்திய அரசின் மோசமான கொள்கைகளால் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்சினையும் பற்றாக்குறையும் தொடரவே செய்கிறது. தேசிய தலைநகர் டெல்லியிலும் கூட இதே நிலை தொடர்கிறது என்பதே வேதனையிலும் வேதனை.
நிலைமை மாறும்
இங்குச் சிலர் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு மக்களும் நம்பிவிட்டார்கள். ஆனால், மக்களுக்கு விடிவு எதுவும் கிடைக்கவில்லை.. இந்த நிலை நிச்சயம் வரும் காலத்தில் மாறும்" என்றார். நாடு முழுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க கேசிஆர் முயன்று வருகிறார். இதற்காக வரும் ஜன.18ஆம் தேதி பல எதிர்க்கட்சிகளை அழைத்து மாபெரும் மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.