தெலுங்கானா: காங்கிரஸிடம் போராடி மன்றாடி ஒரே ஒரு தொகுதியை வாங்கிய பரிதாப இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தலுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்.எல்.சி. இடங்கள் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னரே தெலுங்கானாவில் இடதுசாரிகள் வேர்பிடித்து விஸ்வரூபம் காட்டினர். தெலுங்கானா தனி மாநில போராட்டமாகட்டும், ஆயுதப் போராட்டமாகட்டும் புரட்சிகளின் மைய அச்சாணியாக ஆந்திரத்து இடதுசாரிகள் இருந்தனர். காலம்தான் எத்தனையோ விசித்திரங்களை கொண்டு சேர்க்கிறது.

தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகியது. அத்துடன் 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தெலுங்கானாவின் 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது காங்கிரஸ். அத்துடன் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 2 எம்.எல்.சி. இடங்கள் தருவதாகவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஒரே ஒரு தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டாலும் அக்கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் இந்த முடிவை கம்யூனிஸ்ட் கட்சி மறுபரிசீலனை செய்யும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications